எங்களை உயிருடன் மீட்பீர்களா? ஈரானில் தவிக்கும் 600 தமிழர்கள் கோரிக்கை
போர் சூழலில், ஈரானில் தவிக்கும் 600 தமிழர்கள் தங்களை மீட்குமாறு இந்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான போர் கடந்த பிப்ரவரி 28 ஆம் திகதி முதல் நடைபெற்று வருகிறது.

இந்த போர் இரு நாடுகளுக்கு இடையே மட்டுமல்லாமல், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருவதால், போர் மத்திய கிழக்கு முழுவதும் விரிவடைந்துள்ளது.
ஈரானில் தவிக்கும் 600 தமிழர்கள்
இந்த போர் காரணமாக சுமார் 1000க்கும் அதிகமான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் உயிருக்கு உத்திரவாதம் இல்லாத நிலையில், அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.

மீன்பிடி தொழிலுக்காக ஈரானில் சுமார் 600 தமிழர்கள் வசித்து வருகின்றனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் வசித்து வரும் தங்களை உடனே இந்திய அரசு மீட்க வேண்டும் என இந்திய பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்தது வீடியோ வெளியிட்டுள்ளனர்.
பாந்தர் அப்பாஸ் துறைமுகம் அருகே உள்ள பகுதிகளில் சிலர் வசித்து வருகிறோம். 3 கிமீ தொலைவில் குண்டு விழுவதாகவும், எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை. போர் இன்னும் தீவிரமடையும் முன்னர் எங்களை சிறப்பு விமானங்கள் அல்லது கப்பல்கள் மூலம் இந்திய அரசு மீட்க வேண்டும்.
ஒவ்வொரு நாளும் அடுத்த நாள் நாங்க உயிரோடு எந்திருப்போமா என்ற அச்சத்திலே தூங்க செல்கிறோம். ஆனால் சிறிதாக சத்தம் கேட்டால் கூட குண்டு சத்தமா என்ற அச்சத்தில் எங்களால் தூங்க கூட முடியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள எங்களின் குடும்பத்தினரும் அச்சத்துடன் உள்ளனர்.
இங்கு இணைய இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது. இங்கு ஆள்நடமாட்டமும் இல்லை. இதனை கடைசி வீடியோவாக வெளியிடுகிறோம். இந்த வீடியோக்களை நீங்கள் பார்க்கும் போது நாங்கள் உயிரோடு இருப்போமா என்று கூட தெரியாது.
இந்த வீடியோக்களை கூடுமானவரை பகிர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று எங்களை உயிருடன் மீட்க உதவுங்கள் என உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |