மாணவியை 600 முறை தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியை ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு
மாணவியை தோப்புக்கரணம் போட வைத்த ஆசிரியை ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியை இழப்பீடு வழங்க உத்தரவு
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவைச் சேர்ந்தவர் பாண்டிச்செல்வி. இவரது மகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். அந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக சித்ரா என்பவர் பணியாற்றுகிறார்.
இந்நிலையில், 7-ம் வகுப்பு படிக்கும் இந்த மாணவி வீட்டுப்பாடம் எழுதவில்லை என்பதால் ஒரு நாள் 200 முறையும், அடுத்த நாள் 400 முறையும் ஆசிரியை சித்ரா தோப்புக்கரணம் போட வைத்துள்ளார்.
பின்னர் அவரது சக தோழிகள் அவரை சைக்கிளில் வைத்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தோப்புக்கரணம் போட வைத்ததால் உள் உறுப்புகள் சேதம் அடைந்துள்ளன எனக் கூறினார். இதையடுத்து, ஆசிரியையின் செயலால் தனது மகள் உடல் மற்றும் மனரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் பாண்டிசெல்வி புகார் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த போது, ஆசிரியைக்கு பலமுறை வாய்ப்பு அளித்தும், அவர் ஆணையத்தில் ஆஜராகவில்லை. மேலும் அவர் பதில் மனுவும் தாக்கல் செய்யவில்லை.
எனவே, மனுதாரர் பாண்டிசெல்விக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்று ஆணையத்தின் உறுப்பினர் உத்தரவிட்டார். அதை ஆசிரியை சித்ராவிடம் இருந்து தமிழக அரசு வசூலித்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |