பட்டப்பகலில் கொடூர சம்பவம்: பரபரப்பான ரயில் நிலையத்தில் பதறிப்போன மக்கள்
ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரின் பரபரப்பான ரயில் நிலையத்தில் 14 வயது சிறுவன் பட்டப்பகலில் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிளாஸ்கோ நகரில் அமைந்துள்ள அந்த ரயில் நிலையத்தில் நடந்த வன்முறை சம்பவம் ஒன்றில் 14 வயதான Justin McLaughlin உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார்.
நேற்று மதியத்திற்கு மேல் 3.45 மணிக்கு நடந்த இச்சம்பவத்தை அடுத்து குறித்த சிறுவன் ராணி எலிசபெத் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். ஆனால் சிறிது நேரத்திற்கு பின்னர் குறித்த சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ரயில் நிலையத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பயணிகளை உலுக்கியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வருவதாகவும், சம்பவத்திற்கு தொடர்பான காரணிகளை விசாரணைக்கு உட்படுத்தப்படும் எனவும் ஸ்கொட்லாந்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், தொடர்புடைய விவகாரத்தில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாருடன் பகிர்ந்து கொள்ளவும் கேட்டுக்கொண்டுள்ளனர். இது ஒரு கொடூர வன்முறைச் செயல் என குறிப்பிட்டுள்ள பிரித்தானிய போக்குவரத்து பொலிசார், குற்றவாளியை கண்டுபிடிக்க தங்களாலான அனைத்து உதவிகளையும் முன்னெடுப்போம் என தெரிவித்துள்ளனர்.