குழந்தை பராமரிப்பு மையத்தில் சாமுராய் வாளுடன் புகுந்த இளைஞர் வெறிச்செயல்! 3 குழந்தைகள் உட்பட 5 பேர் படுகொலை
பிரேசிலில் குழந்தை பராமரிப்பு மையத்தில் புகுந்த 18 வயது இளைஞர் ஒருவர் சாமுராய் வாளைக் கொண்டு 3 குழந்தைகள் மற்றும் 2 பராமரிப்பாளர்களை கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படுகொலைச் சம்பவம் நேற்று (செவாய்க்கிழமை) Santa Catarina மாநிலத்தில், 10,000 மக்கள் மட்டுமே வசிக்கும் Saudades நகரத்தில் நடந்துள்ளது.
குழந்தைகளையும் பிராமரிப்பாளர்களையும் தாக்கிய அந்த இளைஞர், பின்னர் தான் வைத்திருந்த சாமுராய் வகை வாளைக் கொண்டு தனது வயிறு மற்றும் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.
தாக்குதல் நடத்தப்பட்ட போது, குழந்தைகளும் பணியாளர்களும் அலறுவதையும், உதவி கேட்டு கூச்சலிடுவதையும் கேட்ட அக்கம்பக்கத்தினர், பொலிஸ் மற்றும் அவசர உதவிகளை அழைத்துள்ளனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் உள்ளே சென்று பார்த்தபோது குழ்நதைகள் மற்றும் பணியாளர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடிய சில குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். 3 குழந்தைகள் மற்றும் 2 பாராமரிப்பளார்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வயது வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த பராமரிப்பு மையம் 6 மாதம் முதல் 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.
தாக்குதல் நடத்திய இளைஞர் உயிருக்கு போராடிவரும் நிலையில் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். மேலும், தாக்குதலுக்கான நோக்கம் என்னவென்று இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த கொடூர சம்பவத்திற்காக மாநிலத்தில் மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என Santa Catarina மாநிலத்தின் ஆளுநர் Daniela Reinehr அறிவித்துள்ளார்.