கடைசியாக ஒரு ஏவுகணை மழை... போர் நிறுத்தம் தொடங்கியதாக அறிவித்த ஈரான்
ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த போர் நிறுத்தத்திற்கு சில மணி நேரம் எஞ்சியுள்ள நிலையில் கடைசியாக இஸ்ரேல் மீது சரமாரித் தாக்குதலை முன்னெடுத்துவிட்டு, போர் நிறுத்தம் தொடங்கியதாக ஈரான் அறிவித்துள்ளது.
போர் நிறுத்தம்
இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலில் நான்கு பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பலர் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் இஸ்ரேலின் அவசர சேவைகள் அமைப்பு உறுதி செய்துள்ளது.
ஈரானில் இருந்து நான்கு சரமாரித் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து இஸ்ரேலியர்கள் பதுங்கு குழிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலையில், உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணிக்கு இஸ்ரேல் மீதான பதில் தாக்குதல்களை நிறுத்திவிட்டதாக ஈரானின் வெளிவிவகார அமைச்சர் Abbas Araghchi அறிவித்துள்ளார்.
ஆனால் 6 மணியளவிலும் ஈரானில் இருந்து ஏவுகணைத் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மற்றும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுக்கத் தொடங்கிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு,
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு நடத்திய இரண்டு நாட்களுக்குப் பிறகு ட்ரம்ப் போர் நிறுத்தத்தை அறிவித்தார். உண்மையில், கத்தாரில் அமைந்துள்ள அமெரிக்காவின் மிகப் பெரிய இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தத் தொடங்கிய நிலையிலேயே, போர் நிறுத்தம் வேண்டும் என ட்ரம்ப் இரு நாடுகளையும் கட்டாயப்படுத்தியுள்ளார்.
ஈரான் தயாரில்லை
ஜனாதிபதி ட்ரம்ப் அறிவிப்பை வெளியிட்ட 6 மணி நேரத்தில் போர் நிறுத்தம் அமுலுக்கு வரவேண்டும் என்றும் இரு நாடுகளையும் அவர் எச்சரித்துள்ளார். ஆனால், இஸ்ரேலுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஈரான் தயாரில்லை என்றும்,
இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தினால், ஈரானும் தாக்குதலை முன்னெடுக்காது என அமைச்சர் Abbas Araghchi தெரிவித்துள்ளார். இதனிடையே, உள்வரும் மற்றும் வெளிச்செல்லும் விமானங்களுக்கு இஸ்ரேலிய வான்வெளி மூடப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும், ஈரானில் இருந்து வந்த சரமாரியான தாக்குதல்கள் காரணமாக அவசர விமானங்கள் உட்பட அனைத்து பயணிகள் விமானங்களுக்கும் வானத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |