மில்லியன் வீரர்களுடன்... ஈரான் விடுத்த மிரட்டல்: மீண்டும் 10 நாள் அவகாசம் அறிவித்த ட்ரம்ப்
ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு ஈரானுக்கான காலக்கெடுவை பத்து நாட்கள் நீட்டித்ததைத் தொடர்ந்து, அந்த நாட்டின் மீதான தாக்குதலை ட்ரம்ப் ஏப்ரல் தொடக்கம் வரை ஒத்திவைத்துள்ளார்.
10 நாட்கள் அவகாசம்
சமூக ஊடகத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானியத் தலைமையின் வேண்டுகோளின் பேரில் தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானிய அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, இன்னும் 10 நாட்கள் அவகாசம் அளிப்பதாகவும், ஏப்ரல் 6 ஆம் திகதி வரையில் அமெரிக்கா அந்த நாட்டின் அணுமின் நிலையங்களைத் தாக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல்வேறு தரப்பில் இருந்து பொய்யானத் தகவல்கள் வெளியாகி வருவதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், ஆனால் ஈரானுடன் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறுவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் முதலில் 5 நாட்கள் அவகாசம் அளித்திருந்தார். அத்துடன் ஈரானுக்கு 15 அம்ச அமைதித் திட்டம் ஒன்றையும் முன்வைத்திருந்தார். ஆனால், ட்ரம்பின் அமைதித் திட்டத்தை ஈரான் நிர்வாகம் தடாலடியாக நிராகரித்தது.
அத்துடன், போரை தாங்கள் தொடங்கவில்லை என்றும், தொடங்கியவர்களே நிறுத்த வேண்டும் என்றும் பதிலளித்தது. இதனால் எண்ணெய் விலை மீண்டும் அதிகரித்தது.

மில்லியன் வீரர்களுடன்
மட்டுமின்றி, மத்தியஸ்தர்கள் வாயிலாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் பரிமாற்றங்கள், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை நடப்பதாக புரிந்துகொள்ள வேண்டாம் என்றும் ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்திருந்தார்.
இதனிடையே, ஈரான் அரசு ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் ஒன்றில், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக, அமெரிக்காவின் சாத்தியமான தரைவழிப் படையெடுப்பை எதிர்கொள்ளத் தயாராக ஒரு மில்லியனுக்கும் அதிகமான இராணுவ வீரர்கள் அணிதிரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மத்திய கிழக்கு குதிக்கு ஏற்கனவே புறப்பட்டுள்ள சுமார் 4,500 கடற்படை வீரர்களுடன் இணைவதற்காக, 82-வது வான்வழிப் பிரிவைச் சேர்ந்த சுமார் 2,000 பாராசூட் வீரர்களை இந்த வாரம் மத்திய கிழக்குக்கு அனுப்ப பென்டகன் தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால், ட்ரம்பின் இந்த நகர்வுக்கு பல நிபுணர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஈரானுக்குள் அமெரிக்க வீரர்கள் நுழைவது என்பது பொறிக்குள் தாமாக சிக்கிக்கொள்வது என்றே எச்சரித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |