தனது மரணத்தை முன்பே கணித்த மருத்துவர்: இறப்பிற்கு முன்பு அவர் செய்த நெகிழ்ச்சியூட்டும் செயல்கள்!
தனது மரணத்தை 2 ஆண்டுகளுக்கு முன்பே அறிந்து கொண்ட இளம் மருத்துவர், அதை அவர் எதிர்கொண்ட விதம் பலரையும் நெகிழ வைத்துள்ளது.
நுரையீரல் புற்றுநோய்
தெலங்கானா மாநிலம் கம்மன் நகரை சேர்ந்தவர் (harsha varthan) ஹர்ஷவர்தன். 34 வயது ஹர்ஷவர்த்தன் MBBS படித்து அவுஸ்திரேலியாவில் டாக்டராக பணியில் இருந்து வந்தார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20 ஆம் திகதி அவருக்கு கம்மம் நகரில் உறவினர் பெண் ஹேமா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதே மாதம் 29ஆம் திகதி அவர் மீண்டும் அவுஸ்திரேலியா புறப்பட்டு சென்றார்.
@News18
அப்போது விரைவில் விசா உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்த பின் மனைவியை அழைத்து செல்கிறேன் என்று கூறி விட்டு சென்றிருக்கிறார்.
இந்த நிலையில் அதே ஆண்டு அக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் உடற்பயிற்சி மேற்கொண்டிருந்த போது அவர் ரத்த வாந்தி எடுத்தார். அதனை தொடர்ந்து செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் அவருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
தைரியமாக மரணத்தை எதிர்கொண்ட மனிதர்
இது பற்றி தொலைபேசியில் தன்னுடைய பெற்றோருக்கு தகவல் தெரிவித்த ஹர்ஷவர்தன் இப்போது இங்கு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று தெரிவித்தார்.
@News18
ஆனால் அவருடைய பெற்றோர்கள் இந்தியாவுக்கு வந்து விட்டால் இங்கு சிகிச்சை எடுத்து கொள்ளலாம் என்று அவரை வற்புறுத்தினர். அவுஸ்திரேலியாவில் தரமான சிகிச்சை கிடைக்கிறது என்று பெற்றோரிடம் கூறியிருந்தார்.
இந்த நிலையில் தன்னுடைய மரணம் நெருங்கி கொண்டிருப்பதை உணர்ந்த ஹர்ஷவர்த்தனுக்கு தான் இறந்து விட்டால் மனைவி விதவை ஆகிவிடுவாரே என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இளம் மனைவி விதவை ஆகிவிட்டால் அவருடைய மொத்த வாழ்க்கையும் பாதிக்கப்படுமே என்று அவர் கவலைப்பட்டார்.
@News18
எதிர்பாராமல் ஏற்பட்ட சூழ்நிலை பற்றி அவர் மனைவியுடன் பேசியதை தொடர்ந்து இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொண்டனர். மனைவி வாழ்க்கையில் பொருளாதார ரீதியாக இடையூறுகளை சந்திக்காத வகையில் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுத்திருக்கிறார்.
உயிரிழந்த மருத்துவர்
தன்னுடைய உடல்நிலை பற்றி வக்கீல் ஒருவர் மூலம் ஆஸ்திரேலியா நாட்டு அதிகாரிகளிடம் தெரிவித்த அவர் நான் இறந்த பின் என்னுடைய உடலை இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று கூறி அதற்குரிய விமான கட்டணம் முழுவதையும் செலுத்தினார்.
@News18
அத்துடன் தன்னுடைய உடலை எடுத்துச் செல்ல பயன்படுத்தக்கூடிய சவப்பெட்டி ஒன்றையும் மூன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தயார் செய்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி ஹர்ஷவர்த்தன் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த தன்னுடைய நண்பர்களிடம் நான் இன்னும் ஓர் இரண்டு மணி நேரங்களில் இறந்து விடுவேன் என்று கூறினார்.
ஹர்ஷவர்த்தன் நினைத்தது போலவே அன்றே ஆஸ்திரேலியாவில் மரணம் அடைந்து விட்டார்.
ஏற்கனவே அவர் செய்து வைத்திருந்த ஏற்பாடுகளின் அடிப்படையில் அவருடைய உடல் விமான மூலம் ஹைதராபாத்தில் உள்ள பேகம் பேட் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு சொந்த ஊரில் இம்மாதம் ஐந்தாம் தேதி இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது.