லெபனானில் போரை நிறுத்த 10 நாடுகள் அவசர கோரிக்கை
லெபனானில் போரை நிறுத்த கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 10 நாடுகள் அவசர கோரிக்கை விடுத்துள்ளன.
லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையேயான மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கனடா, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, ஜப்பான், பிரேசில், கொலம்பியா, இந்தோனேசியா, ஜோர்டான், சியரா லியோன், சுவிட்சர்லாந்து ஆகிய பத்து நாடுகள் இணைந்து 'அவசரமாக போரை நிறுத்த வேண்டும்' என கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளன.
இந்த நாடுகள், லெபனானில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடி குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளன.
இஸ்ரேல் தாக்குதல்களில் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 12 லட்சம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

சமீபத்தில் மூன்று இந்தோனேசிய அமைதிப்படை வீரர்கள் உயிரிழந்த சம்பவம், இந்த அறிக்கைக்கு காரணமாக அமைந்தது.
ஐ.நா. விசாரணையில் ஒருவர் இஸ்ரேலின் டாங்கி தாக்குதலில், மற்ற இருவர் ஹிஸ்புல்லா வைத்த வெடிகுண்டில் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.
இஸ்ரேல் மார்ச் 2-ஆம் திகதி ஹிஸ்புல்லா ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு, லெபனானில் விமானத் தாக்குதல்களை அதிகரித்தது. பின்னர் தெற்கு லெபனானில் தரைத் தாக்குதல்களையும் விரிவுபடுத்தியது.
இதனால், ஆயிரக்கணக்கானோர் தங்கள் கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கூட்டு அறிக்கையில், "ஐ.நா அமைதிப்படை வீரர்கள் உயிரிழப்பை கடுமையாக கண்டிக்கிறோம். மனிதாபிமான பணியாளர்களின் பாதுகாப்பு ஆபத்துக்குள்ளாகியுள்ளது. லெபனானில் உனடடி போர் நிறுத்தம் அவசியம்" என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையேயான போருக்கு இடையில் தற்காலிக போர்நிறுத்தம் எட்டப்பட்டுள்ள நிலையில், லெபனானில் நிலவும் மோதல்களும் அதே ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்துகிறது. ஆனால், இஸ்ரேல் ஹிஸ்புல்லாவை ஆயுதம் கைவிடச் செய்யாமல் போர்நிறுத்ததை ஏற்க மறுக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |