தைவானில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்றில் பயங்கர தீ... 46 பேர் பலி 41 பேர் காயம்: பதைபதைக்க வைக்கும் காட்சிகள்
தைவானில் 13 மாடிக் கட்டிடம் ஒன்றில் தீப்பிடித்ததில் 46 பேர் வரை பலியாகியுள்ளார்கள், 41 பேர் காயமடைந்துள்ளார்கள்.
இன்று அதிகாலை 3.00 மணியளவில் அந்த கட்டிடத்தில் தீப்பிடித்துள்ளது. ஆவேசமாக எரிந்த அந்த தீ, பல மாடிகளை நாசம் செய்துவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த கட்டிடத்தில் முதல் ஐந்து தளங்களிலும் அலுவலகங்கள் இருந்துள்ளன. ஏழு முதல் 11ஆம் தளம் வரை குடியிருப்புகள் இருக்கின்றன. ஆகவே, அதிகாலை நேரத்தில் தீப்பிடித்ததால் மக்கள் குடியிருந்த வீடுகளில்தான் உயிரிழப்புகள் அதிகம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
சம்பவ இடத்திலிருந்து 32 உடல்கள் நேரடியாக பிணவறைக்குக் கொண்டு செல்லப்பட, 55 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபின் அவர்களில் 14 பேர் இறந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளார்கள். தைவானை பொருத்தவரை, ஒருவர் இறந்துவிட்டார் என்பதை மருத்துவமனைதான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கமுடியும் என்பதால் இந்த ஏற்பாடு.
தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியாத நிலையில், பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
வெளியாகியுள்ள புகைப்படங்களில் அந்த கட்டிடம் தீப்பற்றி எரியும் காட்சிகளைப் பார்க்கும்போது மனம் பதறுவதைத் தவிர்க்க இயலவில்லை.