வரிசையாக கொல்லப்பட்ட 8 ராணுவ விமானிகள்: தலிபான்களால் தடுமாறும் அரசு படைகள்
தலிபான் தீவிரவாதிகளின் தொடர் தற்கொலை தாக்குதல்களால் மிரண்டு போன ஆப்கான் ராணுவத்தினர் தற்போது உயிர் பயத்தால் ஒவ்வொருவராக பதவி விலகுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் முக்கிய கட்டத்தில் ஆப்கான் ராணுவம் பேரிடியை எதிர்கொள்ளும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களில் 8 முக்கிய ராணுவ விமானிகள் தற்கொலை தாக்குதலில் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இறுதியாக Black Hawk ஹெலிகொப்டர் விமானியான Hamidullah Azimi சனிக்கிழமை வெடிகுண்டு தாக்குதலில் உடல் சிதறி பலியாகியுள்ளார்.
ஏற்கனவே எண்ணிக்கை குறைவாக உள்ள ஆப்கான் ராணுவம், தலிபான்களால் ஆயுத பலத்தையும் இழந்துள்ள நிலையில், தற்போது அதி முக்கியமான வான்வழி உதவியையும் இழக்கும் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டு படைகள் முற்றாக வெளியேறிய குறுகிய நாட்களில் நாட்டின் பாதிக்கும் அதிகமான நிலப்பரப்பை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.
மூன்று மிக முக்கிய நகரங்களை இதுவரை கைப்பற்றியுள்ளதாக அறிவித்திருந்த தலிபான்கள் தற்போது மேலும் மூன்று நகரங்களை கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டுமின்றி, சேதம் அல்லது உதிரி பாகங்கள் இல்லாததால் இராணுவத்தின் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் செயல்படவில்லை என்று அறிய வந்துள்ளது.
தலிபான்கள் அச்சுறுத்தல் காரணமாக பல விமானிகளும் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.