அதிகரித்த அச்சுறுத்தல்... பாதுகாப்பை பலப்படுத்தும் பிரபல ஐரோப்பிய நாடு
கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட குரான் எரிப்பு மற்றும் காஸாவில் நடந்துவரும் போர் காரணமாக டென்மார்க்கில் பயங்கரவாத அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
ஆபத்து அதிகரித்துள்ளது
டென்மார்க் உளவுத்துறை வெளியிட்டுள்ள தகவலில், ஒட்டுமொத்த அச்சுறுத்தல் நிலை 5 இல் 4 என்றும், ஆபத்து அதிகரித்துள்ளதாகவே கருத வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
டென்மார்க் உட்பட பல நாடுகளுக்கு இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளின் போர் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் அதன் தாக்கம் டென்மார்க்கில் தென்பட வாய்ப்பிருப்பதாகவும் உளவுத்துறை தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உலகின் மிகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய இரு நாடுகளான டென்மார்க்கிலும் ஸ்வீடனிலும் கடந்த ஆண்டு குரானின் பல பிரதிகளை இஸ்லாமிய எதிர்ப்பு ஆர்வலர்கள் தீயிட்டு கொளுத்தினர்.
பேச்சு சுதந்திரம் என்ற பெயரில்
பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் மதத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைக்கவும் அனுமதிக்கப்பட்டனர். ஸ்வீடன் பயங்கரவாத அச்சுறுத்தலை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளது.
மட்டுமின்றி, இஸ்லாமியர்களின் புனித நூலை பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தீயிட்டு கொளுத்திய நடவடிக்கைக்கு பின்னர், பயங்கரவாத தாக்குதல் ஒன்றை முறியடித்துள்ளதாகவும் ஸ்வீடன் தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி, பொது இடங்களில் குரானை எரிப்பதை சட்டவிரோதமாக்கும் சட்டத்தை டென்மார்க் பாராளுமன்றம் டிசம்பர் மாதம் நிறைவேற்றியது. இது இஸ்லாமிய நாடுகளை அமைதிப்படுத்தும் நடவடிக்கையாகவும் பார்க்கப்பட்டது.