கொரோனா தொற்று உருவான வூஹான் நகரில் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ய முடிவு
சீனாவில் கொரோனா உருவான வூஹான் நகரத்து குடிமக்களின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனா முன்னெடுக்கும் இந்த முயற்சியில் வெளிநாட்டு நிபுணர்கள் அல்லது பொதுவான அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்று உருவான விவகாரத்தை மூடி மறைக்க சீனாவின் புதிய முயற்சி இதுவென சமூக ஆர்வலர்களால் குற்றஞ்சாட்டப்படுகிறது.
கொரோனா பரவல் முதன் முதலாக கண்டறியப்பட்ட வூஹான் நகரில் இருந்து, ஆயிரக்கணக்கான குடிமக்களின் ரத்த மாதிரிகளை சீனா கடந்த 2019ல் சேகரித்தது. மொத்தம் 200,000 மக்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது, கொரோனா தொற்றின் உருவாக்கம் தொடர்பில் உலக நாடுகளில் இருந்து எழுந்த கடும் நெருக்கடியை அடுத்து, சீனா நடவடிக்கை எடுக்க முன்வந்தது. முதலில், உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்த குழு ஒன்று சீனாவில் ஆய்வை முன்னெடுத்தது.
ஆனால் அவர்களால் உறுதியான ஒரு முடிவுக்கு எட்ட முடியாமல் போனது என தெரிய வந்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் சீனா முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே, சீனா ரத்த மாதிரிகளை சோதனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. மட்டுமின்றி தங்கள் நாட்டு நிபுணர்களே இந்த ஆய்வை முன்னெடுப்பார்கள் எனவும் அறிவித்துள்ளது.
கொரோனா தொடர்பில் சீனா கடும் விமர்சனங்களை உலக அளவில் எதிர்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா பரவல் தொடர்பில் எச்சரிக்கை விடுத்த விஞ்ஞானி ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.
தற்போது வூஹான் நகர மக்களின் ரத்த மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, உண்மையில் வூஹானில் இருந்து தான் கொரோனா பரவல் தோன்றியதா என்பதை உறுதி செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.