பிசிஆர் பரிசோதனைகளை விட கொரோனாவை விரைவாக துல்லியமாக கண்டறியும் சோதனை: ஒரு அரிய கண்டுபிடிப்பு
பிசிஆர் பரிசோதனைகளுக்கு பதிலாக எக்ஸ் ரே சில நிமிடங்களுக்குள், 98% துல்லியமாக கொரோனா தொற்றைக் கண்டறிவதாக அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குறைவான நேரத்தில், மிகத் துல்லியமாக எக்ஸ் ரேக்கள் கொரோனாவைக் கண்டுபிடிப்பதால், இது ஒரு அரிய கண்டுபிடிப்பாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
மேற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அறிவியலாளர்கள் இந்த பரிசோதனை முறையை உருவாக்கியுள்ளார்கள்.
செயற்கை நுண்ணறிவு திட்டத்துடன் (Artificial Intelligence programme) எக்ஸ் ரேக்களையும் இணைத்து செய்யப்படும் இந்த பரிசோதனை, பிசிஆர் வசதி இல்லாத இடங்களில் இந்த பரிசோதனை பெரிதும் உதவியாக இருக்கும் என்கிறார்கள் அவர்கள்.
அவர்கள் மேற்கொண்ட ஆய்வில், கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 3,000 நோயாளிகளின் எக்ஸ் ரே படங்கள் ஒப்பிடப்பட்டு, செயற்கை நுண்ணறிவுத் திட்டம் ஒன்றின் உதவியுடன் பகுப்பாய்வு செய்யப்பட்டு சோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றன.
இந்த பரிசோதனை, குறுகிய நேரத்தில், 98 சதவிகிதம் துல்லியமான முடிவுகளைக் கொடுத்தது.
பிசிஆர் பரிசோதனைகளுக்கு பல மணி நேரம் முதல், நாட்கள் வரை பிடிக்கும் நிலையில், குறைவான நேரத்தில், மிகத் துல்லியமான முடிவுகளை இந்த பரிசோதனை முறை கொடுப்பதால், பிசிஆர் பரிசோதனைகளின் இடத்தை எக்ஸ் ரே முறை பரிசோதனைகள் பிடித்துக்கொள்ளலாம் என கருதப்படுகிறது.
ஆனாலும், கோவிட் தொற்றின் ஆரம்ப நாட்களில் அதன் அறிகுறிகள் எக்ஸ் ரேயில் தெரியாது. ஆகவே, மொத்தமாக பிசிஆர் பரிசோதனைகளை விட்டுவிட முடியாது.
அதே நேரத்தில், வேகமாக கொரோனா வைரஸ் பரவும் ஒரு இடத்தில், பிசிஆர் வசதி இல்லை என்றால், அந்த இடங்களில், இந்த சோதனை முறை, உயிர் காக்கும் சோதனையாக, என்ன சிகிச்சை அளிப்பது என்பதை முடிவு செய்ய உதவும் ஆபத்பாந்தவனாக இருக்கும்.