தாய்லாந்து சுற்றுலா விசா விதிகளில் மாற்றம்., 93 நாடுகளுக்கு பாதிப்பு
தாய்லாந்து அரசு சுற்றுலா விசா விதிகளில் பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது.
இதுவரை 93 நாடுகளின் குடிமக்கள், விசா இல்லாமல் 60 நாட்கள் வரை தாய்லாந்தில் தங்க அனுமதி பெற்றிருந்தனர்.
ஆனால், புதிய விதிமுறையின்படி இனி அவர்கள் 30 நாட்களுக்கு மேல் தங்க விரும்பினால் விசா பெற வேண்டும்.
இந்த மாற்றத்தின் மூலம், 2024 ஜூலை மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட 60 நாள் விசா விலக்கு திட்டம் இதோடு ரத்து செய்யப்படுகிறது.

அப்போது, கொரோனா பாதிப்புக்குப் பிறகு சுற்றுலா வளர்ச்சியை ஊக்குவிக்க அரசு இந்த சலுகையை வழங்கியது.
ஆனால் சமீபத்தில் வெளிநாட்டவர்களுடன் தொடர்புடைய போதைப்பொருள் மற்றும் மனிதக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்ததால், பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
தாய்லாந்து பிரதமர் அனுதின் சார்ன்விராகுல், “இப்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப பொருளாதாரமும், தேசிய பாதுகாப்பும் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் அவசியமானது” என்று தெரிவித்துள்ளார்.
பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் குடிமக்கள் இப்போது 30 நாட்களுக்கு மேல் தங்க விசா பெற வேண்டும்.
சில நாடுகளுக்கு இருதரப்பு ஒப்பந்தங்களின் அடிப்படையில் வேறுபட்ட கால அவகாசம் வழங்கப்படும்.
இந்த புதிய விதிமுறை, தாய்லாந்தின் Royal Gazette-இல் வெளியான 15 நாட்களுக்குப் பிறகு அமுலுக்கு வரும். சுற்றுலா தாய்லாந்தின் முக்கிய பொருளாதார ஆதாரமாக இருப்பதால், இந்த மாற்றம் உலகளாவிய பயணிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |