ஜேர்மனியில் மூன்றாவது கொரோனா அலை ஆரம்பம்: எச்சரிக்கும் மருத்துவத்துறை நிபுணர்
திடீர் மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்கள் பரவுவதைத் தொடர்ந்து, ஜேர்மனி மூன்றாவது கொரோனா அலையின் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக மருத்துவத்துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் கொரோனா தொற்றுக்கு ஆளாகுவோரின் எண்ணிக்கை சற்று குறையத்தொடங்கிய நிலையில், தற்போது மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்கத் துவங்கியுள்ளது.
முந்தைய வாரம் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 100,000க்கு 55 முதல் 57ஆக இருந்த நிலையில், நேற்று அது மீண்டும் 60.5ஆக உயர்ந்துள்ளது.
ஜேர்மனி இன்னமும் இரண்டாவது அலையின்போது அமுல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்திலிருந்து வெளியே வராத நிலையில், இப்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பது, மூன்றாவது அலை துவங்குவதன் அறிகுறி என்கிறார் ஜேர்மன் மருத்துவத்துறை நிபுணரான Karl Lauterbach என்பவர்.
இன்னமும் நாம் மூன்றாவது அலையின் மையப்பகுதியைக்கூட எட்டவில்லை என்று கூறும் Lauterbach, மூன்றாவது அலை துவங்கிவிட்டது, அதை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார்.
ஆக, பொதுமுடக்கத்தை நெகிழ்த்துவது அரிதான காரியம் என்கிறார் அவர். ஜேர்மனியில் வெப்பநிலை அதிகரித்துவருவதைத் தொடர்ந்து பலர் அதனால் கொரோனா சூழல் மாறும் என நம்புகிறார்கள்.
ஆனால், வெப்பநிலை உயர்வால் எந்த மாற்றமும் இருக்காது என்கிறார் Lauterbach. வெப்பநிலை உயர்வு, பிரித்தானிய கொரோனா வைரஸை பாதிக்காது என்கிறார் அவர்.