18 மாதங்களுக்குப்பின் கணவருடன் இணையும் பிரித்தானிய மகாராணியார்
2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப் மரணமடைந்தார்.
இன்று மகாராணியாரின் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி, தன் காதல் மனைவி எலிசபெத்தை விட்டுப் பிரிந்தார் இளவரசர் பிலிப்.
அன்று தேவாலயத்தில், அருகில் ஆறுதல் கூறக்கூட யாரும் இல்லாமல் மகாராணி அமர்ந்திருந்த புகைப்படம் காண்போரைக் கண் கலங்கவைத்தது.
தன் கணவர் மீது தீராக் காதல் கொண்ட மகாராணி, அதற்குப் பின் வெளியே தான் உறுதியாக இருப்பதாகக் காட்டிக்கொண்டாலும், அவரது கணவருடைய பிரிவு அவருக்கு மிகப்பெரிய இழப்பாக இருந்ததை மறுப்பதற்கில்லை.
Credit: Reuters
தன் கணவருடைய உடல் இருக்கும் இடத்துக்கு அருகிலேயே இருக்கவேண்டும் என்பதற்காக, விண்ட்சர் மாளிகையையே தனது வீடாக்கிக்கொண்டார் மகாராணியார்.
உடல் நிலை ஒத்துழைக்காவிட்டாலும்கூட, கடைசி வரை, அதாவது பிரித்தானியாவுக்கு ஒரு பிரதமரை பதவியிலமர்த்துவது வரை, தனது கடமைகளை செவ்வனே செய்து முடித்த மகாராணியார், கடந்த செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி, இயற்கை எய்திவிட்டார்.
Credit: EPA
இந்நிலையில், கணவர் இறந்து 18 மாதங்களுக்குப் பிறகு, விண்ட்சர் மாளிகையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்திலமைந்துள்ள ராயல் வால்ட்டுக்குள் வைக்கப்பட்டுள்ள அவரது கணவருடைய உடலுக்கருகில் மகாராணியாரின் சவப்பெட்டி வைக்கப்பட உள்ளது.
அதன்பின், குடும்பத்தார் மட்டும் பங்கேற்கும் ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சிக்குப் பின், மகாராணியார் மற்றும் அவரது கணவரான இளவரசர் பிலிப் ஆகிய இருவருடைய உடல்களும் மன்னர் ஆறாவது ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படும்.
தன் கணவருக்கு அருகில், தன் தந்தை மன்னர் ஆறாம் ஜார்ஜ், தாய் ராணி எலிசபெத், தங்கை இளவரசி மார்கரட் ஆகியோர் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஆறாவது ஜார்ஜ் நினைவு தேவாலயத்தில் தன்னை அடக்கம் செய்யவேண்டும் என்பது மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது.
Credit: Camera Press
Credit: AFP