பிரித்தானிய பெண் சித்திரவதை செய்து கொல்லப்பட்ட விவகாரம்... ஒருவர் கைது
கிரீஸ் நாட்டில் வாழும் பிரித்தானிய பெண் ஒருவரை அவரது கணவரின் கண் முன்னே கொள்ளைக் கும்பல் கழுத்தை நெறித்துக் கொன்ற சம்பவத்தில், சந்தேகத்துக்குரிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாபிஸ் (Babis) என்னும் Charalambos Anagnostopoulos (33), ஏதென்சிலுள்ள தங்கள் வீட்டில் தன் மனைவி கரோலின் (Caroline Crouch, 20) மற்றும் தனது 11 மாத பெண் குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் கணவனையும் மனைவியையும் கட்டிப்போட்டுவிட்டு கொள்ளையடிக்கும் முயற்சியின்போது கரோலின் கொல்லப்பட்டார்.
பாபிஸ் மயங்கிக்கிடப்பதாக கொள்ளையர்கள் எண்ணியிருந்த நேரத்தில், அவர் கண்ணில் கட்டப்பட்டிருந்த கட்டு விலகி கொள்ளையர்களை பார்த்திருக்கிறார். தன் மனைவியைக் கொன்றவன், உயரமான, அடர் நிறம் கொண்ட, குண்டான 30 வயதுக்குட்பட்ட ஒருவன் என பாபிஸ் தெரிவித்திருந்தார்.
ஆகவே, இன்று அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என பொலிசார் சந்தேகிக்கும் நபர்களின் புகைப்படங்கள் இன்று பாபிஸுக்கு காட்டப்பட உள்ளன. அவர் குற்றவாளிகளை அடையாளம் காட்ட இருக்கிறார்.
சம்பவத்தின்போது, கொளையர்களில் ஒருவன் கரோலினை மிரட்டும்போது, கிக் பாக்சரான கரோலின் அவனுடன் கடுமையாக போராடியிருக்கிறார். அத்துடன் அவரை மிரட்டிய கொள்ளையனின் முகமூடி விலக, அவனது முகத்தையும் அவர் பார்த்திருக்கிறார்.
ஆகவே, அந்த பெண் திருப்பித் தாக்குவார் என்பதை எதிர்பாராததால் அதிர்ச்சியடைந்த அந்த கொள்ளையர்கள், அவர் கொள்ளையன் ஒருவனின் முகத்தையும் பார்த்துவிட்டபடியால், இந்தப் பெண்ணை உயிருடன் விட்டால் தங்களை காட்டிக்கொடுத்துவிடுவார் என பயந்து அவரைக் கொலை செய்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள். மேலும், கொள்ளையர்கள் வைத்திருந்த இரண்டு துப்பாக்கிகளை பாபிஸ் பார்த்திருக்கிறார்.
அப்படிப்பட்ட துப்பாக்கிகள் கிரீஸ் நாட்டில் கிடையாதாம். ஆக, அந்த கொள்ளையர்கள் வெளிநாட்டவர்கள் என சந்தேகித்து பொலிசார் அவர்களைத் தேடி வந்தார்கள். இந்நிலையில், பல்கேரிய எல்லையில் ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் வாகன சோதனையின்போது போலி பாஸ்போர்ட்டுடன் சுற்றுவது தெரியவரவே பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
அவரது DNA விவரங்களை ஆராயும்போது, அவர் கரோலின் கொல்லப்பட்ட இடத்திலிருந்து 20 நிமிட பயண தூரத்தில் அமைந்துள்ள ஒரு வீட்டில் கொள்ளையடித்த ஐந்துபேரில் ஒருவர் என்பது தெரியவந்துள்ளது.
அவரைக் கைது செய்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதற்கிடையில், கரோலினுடைய உடல் அவர் சிறுவயதில் வாழ்ந்த, அவருக்கு மிகவும் பிடித்த, Alonnisos தீவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
மனைவியின் நினைவாக தங்கள் திருமண புகைப்படத்தை வெளியிட்டு மனைவிக்கு பிரியா விடை கொடுத்துள்ளார் பாபிஸ். குழந்தை லிடியாதான் பாவம், தாய்க்கு என்ன நேரிட்டது என்பது தெரியாமல் திகைத்துப்போயிருக்கிறாள்!