வவ்வால் உடலில் இருந்து மனிதர்கள் உடலில் புகுந்த கொரோனா! உலகை அதிர்ச்சியடைய வைத்த ஒரு ஆய்வு
கொரோனா உருமாறியதால் வவ்வாலிடம் இருந்து மனிதர்களிடம் பரவியதாக ஆய்வில் தெரியவந்துள்ளது உலகை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இதன் 2வது அலை உலகை பீதியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் உருமாறிய கொரோனா பரவலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் வவ்வாலின் உடலில் இருந்து வந்த கொரோனா நுண்கிருமி மனிதர்களிடம் பரவுவதற்கு ஏற்ப மிக சிறிய அளவில் தன்னை உருமாற்றிக் கொண்டது சமீபத்தில் நடந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பொதுவாக ஒரு உயிரினத்தில் இருந்து மற்றொரு உயிரினத்தின் உடலில் வாழ்வதற்கு ஒரு நுண்ணுயிர் தன்னை உருமாற்றம் செய்து கொள்ள நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும்.
ஆனால், வவ்வாலில் இருந்து உருமாற்றம் பெற்ற கொரோனா நுண்ணுயிர் மனிதர்களிடம் வேகமாக பரவும் வகையில் விரைவில் உருமாற்றம் பெற்றுள்ளது.
உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனா நுண்கிருமி உருமாற்றம் குறித்து ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கிளஸ்கோ பல்கலைக்கழகம் ஆய்வு செய்தது. நுண்கிருமி ஆய்வாளர் ஆஸ்கா மேக் லீன் தலைமையிலான குழுவினர் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
அதில், வவ்வாலின் உடலில் இருந்து வந்த கொரோனா நுண்கிருமி தன்னை பெரிய அளவில் உருமாற்றம் செய்யாமலேயே சிறிய அளவில் தன்னை மாற்றிக் கொண்டு மனிதர்களின் உடலில் புகுந்து பரவுவதற்கான திறனைப் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.