சமூக ஊடகம் வாயிலாக ஆசை காட்டி இளைஞரை அழைத்த அழகிய இளம்பெண்: சபலத்தால் ஏற்பட்ட பரிதாப முடிவு
சமூக ஊடகம் ஒன்றின் வாயிலாக அழகிய இளம்பெண் ஒருவர் ஆசை காட்டி இளைஞர் ஒருவரை அழைக்க, சபலப்பட்டுச் சென்ற அந்த இளைஞரால் ஒரு உயிர் பலியான சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள நியூ மெக்சிகோ என்னும் இடத்தில் நிக்கோலஸ் (Nicholas Otero - 20) என்ற இளைஞரை, அனா பெல்லா (Ana Bella Duke - 18) என்ற அழகிய இளம்பெண் சமூக ஊடகம் வாயிலாக ஆசைகாட்டி அருகிலுள்ள பூங்கா ஒன்றிற்கு வருமாறு அழைத்துள்ளார்.
சபலப்பட்ட நிக்கோலஸ் அந்தப் பூங்காவிற்குச் செல்ல, அங்கு அனா பெல்லாவுடன் மூன்று இளைஞர்கள் இருந்திருகிறார்கள். நிக்கோலஸிடமிருந்து நகை, பணம் அனைத்தையும் பறித்துக் கொண்ட மூவரும், அவரை அவரது வீட்டுக்குத் துப்பாக்கி முனையில் அழைத்துவந்துள்ளனர்.
வீட்டில் நிக்கோலஸின் சகோதரரான எலியாஸ் (Elias Otero - 24) என்பவர் இருந்திருக்கிறார். அவரிடம், 1,000 டொலர்கள் கொடுக்குமாறு அனா பெல்லாவின் காதலரான ஆட்ரியன் (Adrian Avila - 17)ம் மற்றவர்களும் மிரட்ட, அவரோ தனது துப்பாக்கியை எடுத்து வந்து, தன் தம்பியை விட்டு விடுமாறு வற்புறுத்த, ஆட்ரியன் சட்டென தனது துப்பாக்கியால் எலியாஸை சுட்டுக் கொன்றிருக்கிறார்.
இந்த சம்பவம் சென்ற ஆண்டு, (2021) பிப்ரவரி மாதம் நிகழ்ந்த நிலையில், நேற்று முன் தினம் அனா பெல்லா பொலிசில் சரணடைந்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் மீது கொலை, கடத்தல், ஆயுதங்களுடன் கொள்ளையில் ஈடுபட்டது, சாட்சியங்களை அழிக்க முயன்றது ஆகிய குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அனா பெல்லாவின் காதலரான ஆட்ரியன் சென்ற மாதம் பொலிசில் சரணடைந்த நிலையில், அவர்களது கூட்டாளியான மற்ற நபர்கள் யார் என இன்னமும் தெரியவரவில்லை.