பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட இருந்த இளம்பெண்: டாட்டூவால் தப்பிய சுவாரஸ்ய சம்பவம்
பிரித்தானியாவிலிருந்து ஈராக்குக்கு நாடுகடத்தப்பட இருந்த இளம்பெண் ஒருவர், தான் தனது தோளில் டாட்டூ ஒன்றை வரைந்துள்ளதால் தான் ஈராக்குக்குச் சென்றால் தனது உயிருக்கு ஆபத்து என்ற வாதத்தை முன்வைத்தார்.
2016ஆண்டு புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட குர்திஷ் புகலிடக் கோரிக்கையாளரான அந்த 28 வயது இளம்பெண், மேலும் மேல்முறையீடு செய்யும் உரிமையை இழந்துவிட்டதாக அவருக்கு கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் துவங்கின.
ஆனால், தான் தனது தோளில், பிரபல Beatles பாடகர் குழுவின் பாடல் வரிகளிலுள்ள 'take these broken wings and learn to fly' என்ற வார்த்தைகளை டாட்டூவாக குத்தியிருப்பதாகவும், தான் ஈராக்குக்கு நாடு கடத்தப்பட்டால், தான் முழுமையான மேற்கத்திய பெண்ணாக மாறிவிட்டதாகக் குற்றம் சாட்டி தனக்கு ஆபத்து ஏற்படும் என்றும் வாதிட்டார் அந்த இளம்பெண்.
முன்பு ஈராக்கில் தான் ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட பறவை போல் வாழ்ந்துவந்ததாகவும், பிரித்தானியாவில் தான் சுதந்திரப் பறவையாக வாழ்வதாக தெரிவித்த அந்த இளம்பெண், தான் ஈராக் சென்றால், தன் குடும்பத்தாரும் சமுதாயத்தினருமே தன்னைத் துன்புறுத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.
ஆகவே, அவர் நாடு கடத்தப்படும் முடிவை தடுத்து நிறுத்தியுள்ள நீதிபதி ஒருவர், ஆனால், அந்த இளம்பெண் மனித உரிமைகள் அடிப்படையில் பிரித்தானியாவில் தங்கும் உரிமை பெறவேண்டுமானால், தான் ஈராக் சென்றால் தனக்கு அபாயம் நேரிடும் என்பதை நிரூபிக்க வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார்.