தாலிபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தான்... முதல்முதலாக முக்கிய நாட்டின் வெளிவிவகார அமைச்சர் விஜயம்
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அதிகாரங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ள நிலையில், முதல் வெளிநாட்டு தலைவராக கட்டார் அமைச்சர் விஜயம் செய்துள்ளார்.
கட்டார் வெளிவிவகார அமைச்சர் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல் தானி ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்கு சென்றுள்ள நிலையில், தாலிபான்களின் புதிய அரசாங்கத்தில் செயல் பிரதமராக உள்ள முல்லா முகமது ஹசன் அகுந்தை சந்தித்துள்ளார்.
மட்டுமின்றி முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாய் உள்ளிட்ட தலைவர்களையும் ஞாயிறன்று அமைச்சர் அல் தானி சந்தித்துள்ளார்.
அமெரிக்க துருப்புகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிய பின்னர் செல்வாக்கு மிகுந்த ஒரு நாட்டின் உயர் ஸ்தானீயர் ஒருவர் அந்த நாட்டுக்கு செல்வது இதுவே முதல் முறை.
தாலிபான்கள் அரசின் புதிய வெளிவிவகார அமைச்சர், அவரது துணை அமைச்சர் உள்ளிட்டவர்களையும் மரியாதை நிமித்தம் அல் தானி சந்தித்துள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவாக கட்டார் தற்போது எடுத்து வரும் முயற்சிகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாலிபான்கள் மீது அதிக செல்வாக்கு உள்ள நாடுகளில் ஒன்றாக கட்டார் பார்க்கப்படுகிறது. மட்டுமின்றி, ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது அனைத்தும் கட்டாரின் மேற்பார்வையிலேயே நடந்துள்ளது.
ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் நாட்டைவிட்டு வெளியேற காரணமாக அமைந்ததுடன், முழு ஆதரவையும் அளித்து வந்துள்ளது கட்டார் நிர்வாகம்.
தற்போதைய தாலிபான்கள் அரசை இதுவரை எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல, கட்டார் உட்பட மூன்று நாடுகள் மட்டுமே தாலிபான்களின் முந்தைய ஆட்சியை ஆதரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.