புலம்பெயர்வோர் தலையில் துப்பாக்கியை வைத்து கட்டாயப்படுத்தி படகில் ஏற்றும் கடத்தல்காரர்கள்: புலம்பெயர்ந்தோர் ஒருவரின் அனுபவம்
ஆங்கிலக்கால்வாயில் மூழ்கி 27 புலம்பெயர்வோர் உயிரிழந்த பரிதாபம் நிகழ்ந்து மூன்று நாட்கள் கூட சரியாக முடியவில்லை.
ஆனால், அதற்குள் மீண்டும் ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய பிரான்சில் தற்காலிக முகாம் அமைத்துத் தங்கியிருக்கும் ஒரு கூட்டம் புலம்பெயர்வோர் தயாராகிக்கொண்டிருக்கிறார்கள்.
தங்கள் நாட்டை விட்டு பிரித்தானியாவுக்குச் செல்லும் நோக்கில் புறப்படும் இந்த புலம்பெயர்வோர், பிரான்சை வந்தடைவதற்குள்ளேயே முற்றிலும் களைத்துப்போகிறார்கள், மனோரீதியிலும், உடல் ரீதியிலும்.
ஆனாலும், பிரித்தானியாவைச் சென்றடையும் மற்றவர்களைப் பார்த்து, தாங்களும் அதேபோல் பிரித்தானியாவை அடையவேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அப்புறம், தாங்கள் விட்டுவந்த நாட்டுக்குத் திரும்பிச் செல்ல முடியாது. இனி முன்னோக்கிய பயணம் மட்டுமே!
அவர்களுடைய இந்த சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொள்ளும் மக்களைக் கடத்தும் கடத்தல்காரர்கள், அவர்களை ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்கு அனுப்புவதற்காக ஆளுக்கு 3,000 பவுண்டுகள் முதல் 6,000 பவுண்டுகள் வரை கறந்துவிடுகிறார்கள். யாராவது தயங்கினால், இந்த கடத்தல்காரர்கள் எப்படியாவது பேசி அவர்கள் மனதை மாற்றிவிடுகிறார்களாம்.
அப்படி கடத்தல்காரர்கள் இந்த புலம்பெயர்வோரை மிரட்டுவதை என் என கண்ணால் பார்த்துள்ளேன் என்கிறார் Dunkirk மற்றும் Calais பகுதிகளில் முகாம்களில் தங்கியிருந்த தனது 40 வயதுகளிலிருக்கும் ஈராக்கைச் சேர்ந்த ஒருவர்.
தற்போது அவர் ஹாலந்து நாட்டில் குடியமர்ந்துவிட்டார். அங்கு அவருக்கு புகலிடமும் வழங்கப்பட்டுவிட்டது. இந்த கடத்தல்காரர்கள், புகலிடக்கோரிக்கையாளர்களை, நீ போய்த்தான் ஆகவேண்டும், அல்லது சுட்டுவிடுவோம் என மிரட்டுவதைத் தான் பார்த்ததாக தெரிவிக்கிறார் அவர்.
அவர்களைப் பொருத்தவரை, ஒரு சிறு படகில் அவர்கள் எத்தனை பேரை ஏற்றுகிறார்களோ, அவ்வளவு பணம் அவர்களுக்குக் கிடைக்கும். அவர்களுக்கு அதுதான் தேவையே ஒழிய, அவர்களுக்கு புலம்பெயர்வோர் மீது அக்கறை எதுவும் கிடையாது.
அதுமட்டும் இல்லையாம், சில நேரங்களில் இப்படி மனிதர்களை கடத்தும் கும்பல்களுக்குள்ளேயே சண்டை வர, அவர்களுக்கு நேராகவும் துப்பாக்கிகள் நீட்டப்படுமாம். ஒரு மாதம் முன்பு இப்படி நடந்த ஒரு சண்டையில் ஒரு கடத்தல்காரர் மற்றவரைச் சுட, அவர் காலில் நான்கு குண்டுகள் பாய்ந்ததாம். சில புலம்பெயர்வோரோ, நடந்ததைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்துவிட்டார்களாம்.
இப்படி மக்களைக் கடத்தும் இந்த கூட்டத்தினர் மிக வசதியுடன், பெரும் செலவில் ஆடம்பரமாக விமானத்தில் பறப்பதும், தாங்கள் செய்யும் தொழில் குறித்து பெருமைப்பட்டுக்கொள்வதும் உண்டாம்.
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக இந்த கடத்தல்காரர்கள் பிரெஞ்சுக் கடற்கரையில் உலாவரும் நிலையில், இந்த பிரச்சினை இப்போதைக்கு முடிவுக்கு வரப்போவதில்லை என்கிறார், Daily Mail பத்திரிகையில் பணியாற்றும் Sue Reid என்னும் பத்திரிகையாளர்.