ஜேர்மனியில் இரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற நோயாளி: ஹெச் ஐ வியிலிருந்து விடுபட்ட ஆச்சரியம்
மனிதன், தன்னுடன் போராடும் நோய்களை எதிர்த்துப் போராடிக்கொண்டே இருக்கிறான்.
நோய்களைக் கண்டுபிடிப்பதற்கான பரிசோதனைகளும், பெரும்பாலான நோய்களுக்கு சிகிச்சைக்கான மருந்துகளும், நோய் வராமலே தடுப்பதற்கு தடுப்பூசிகளும் கண்டுபிடிக்கப்பட்டு, கிட்டத்தட்ட மருத்துவத்துறையில் மனித இனம் வெற்றிகண்டுவிட்டது என இறுமாப்பு கொண்டிருந்த ஒரு காலகட்டத்தில்தான், அத்தனை கண்டுபிடிப்புகளையும் தூக்கி சாப்பிட்டுவிட்டாற்போல ஒரு புதிய நோய் கண்டுபிடிக்கப்பட்டது.
அது, ஹெச் ஐ வி...
ஹெச் ஐ வி என்னும் பயங்கர நோய்
ஹெச் ஐ வியை குணமாக்க மருத்துவ உலகம் இன்னமும் போராடிக்கொண்டே இருக்கிறது. ஹெச் ஐ வி கிருமிகளைக் கட்டுப்படுத்த மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், முற்றிலுமாக ஒரு நோயாளி ஹெச் ஐ வியிலிருந்து விடுபட்டுவிட்டார் என தைரியமாகச் சொல்லும் ஒரு நிலையோ, இனி அவர் சாதாரண மனிதனாக சமுதாயத்தில் நீண்ட நாள் உலாவரலாம் என்ற உறுதியை அளிப்பதற்கான நிலையோ இன்னமும் முழுமையாக வரவில்லை.
சில குறிப்பிட்ட வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் கொடுத்து, இரத்தம் மற்றும் நிணநீர் திசுக்கள் தவிர்த்து வேறு எந்த செல்களிலும் ஹெச் ஐ வி கிருமியின் மரபணுக்கள் இல்லை என தெரியவந்தால், அதை ஹெச் ஐ வி குணமாகிவிட்டதாக கருதும் ஒரு நிலைதான் இன்றும் காணப்படுகிறது.
ஜேர்மனியில் குணமான ஹெச் ஐ வி நோயாளி
இதே மாதிரியான ஒரு நிலையில், ஜேர்மனியின் Düsseldorf நகரிலுள்ள நோயாளி ஒருவர் ஹெச் ஐ வியிலிருந்து விடுபட்டுவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
ஹெச் ஐ வியால் பாதிக்கப்பட்டிருந்த அந்த 53 வயது நபர், இரத்தப்புற்றுநோயாலும் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். அவருக்கு, இரத்தப்புற்றுநோய்க்காக எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒருவரது எலும்புக்குள் இருக்கும் bone marrow என்னும் ஸ்டெம் செல்கள் அவருக்குக் கொடுக்கப்பட்டு, அவருக்கு இரத்தப்புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
Image: Manuel Valdes/AP/picture-alliance
2013ஆம் ஆண்டு அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கூடவே, ஹெச் ஐ வி கிருமிகளைக் கட்டுப்படுத்தும் மருந்துகளையும் அவருக்குக் கொடுந்துவந்துள்ளார்கள் மருத்துவர்கள்.
அவரது எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பலனளித்துள்ளதா என்பதைக் கண்டுபிடிப்பதற்காக, 2018ஆம் ஆண்டு, அவருக்குக் கொடுக்கப்பட்டுவந்த ஹெச் ஐ வி கிருமிகளைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஹெச் ஐ வி கிருமிகளைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளப்பட்டு நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகள், அவரது இரத்தம் மற்றும் நிணநீர் திசுக்கள் தவிர்த்து வேறு எந்த செல்களிலும் ஹெச் ஐ வி கிருமியின் மரபணுக்கள் இல்லை என்பதைக் காட்டியுள்ளன.
அதன் அடிப்படையில், அவர் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலமாக ஹெச் ஐ வியிலிருந்து விடுபட்டுவிட்டதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இந்த சிகிச்சையில் முக்கிய விடயம் என்னவென்றால், இந்த நோயாளிக்கு கிடைத்த பலனை வைத்து, மொத்தத்தில் எல்லா ஹெச் ஐ வி நோயாளிகளையும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலம் குணமாக்கிவிடலாம் என்று கூறிவிடமுடியாது. காரணம், அவரைப்போலவே இதே எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை கொடுக்கப்பட்ட எல்லா ஹெச் ஐ வி நோயாளிகளுக்கும் அந்த சிகிச்சை வெற்றிகரமானதாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.