நூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த சித்திரவதை முகாம் காவலர்: விசாரணையிலிருந்து தப்பினார்
நூற்றுக்கணக்கானோரின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த சித்திரவதை முகாம் ஒன்றில் காவலராக பணி புரிந்த ஒருவர், உடல் நிலை காரணமாக வழக்கு விசாரணையிலிருந்து தப்பியுள்ளார்.
நாஸி யுக ஜேர்மனியில் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் முதலானோர் கொடூரமாக சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள்.
பின்னர், அப்படி கொடூர செயல்களை ஈடுபட்டவர்களை ஜேர்மனி விசாரித்து தண்டித்துவந்தது.
முன்பெல்லாம் நேரடியாக குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்ட நிலையில், இப்போது அந்த சித்திரவதை முகாம்களில் காவலர்களாக இருந்தவர்களும் நீதியின் முன் நிறுத்தப்பட்டு வருகிறார்கள்.
அவ்வகையில், Stutthof என்ற இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சித்திரவதை முகாமில் காவலராக இருந்த Harry S என்பவரும் சட்டத்தின் முன் கொண்டுவரப்பட்டார்.
ஆனால், Harryக்கு 96 வயதாகும் நிலையில், அவரது உடல் நிலை விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று கூறி அவர் விசாரணையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
Harry, Stutthof சித்திரவதை முகாமில் 1944 ஜூன் முதல் 1945 மே வரை காவலராக பணியாற்றினார்.
அந்த காலகட்டத்தில் 600 பேர் காற்றுப்புகாத அறைகளுக்குள் அடைக்கப்பட்டு விஷவாயு செலுத்தி கொலை செய்யப்படுவதற்காக கொண்டு செல்லப்படுவதை அவர் மேற்பார்வையிட்டுள்ளார்.
ஆகவே, அவர்களது கொலைக்கு உதவியாக இருந்ததாக Harry மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
Harry விசாரணையிலிருந்து தப்பினாலும், Stutthof சித்திரவதை முகாமிலிருந்து கொலை செய்யப்படுவதற்காக 600 பேர் கொண்டு செல்லப்படுவதை நிச்சயம் அறிந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை என்று கூறியுள்ள நீதிமன்றம், அவர் ஒரு குறிப்பிட்ட தொகையை செலுத்த உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அது எவ்வளவு தொகை என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை. Stutthof சித்திரவதை முகாமில், மொத்தத்தில் 65,000 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக கருதப்படுகிறது.