தவெகவிற்கு ஆதரவு வழங்கியது ஏன்? விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்
தவெகவிற்கு ஆதரவு வழங்கியது ஏன் என விசிக தலைவர் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
முதலமைச்சராக உள்ள விஜய்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம்.

பெரும்பான்மை இல்லாமல் இருந்த நிலையில், 5 எம்எல்ஏக்கள் கொண்ட காங்கிரஸ் மற்றும் தலா விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ள நிலையில் தவெக ஆதரவு எம்எல்ஏக்களின் பலம் 120 ஆக அதிகரித்துள்ளது.
இதன் பின்னர் விசிக தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில பொதுச்செயலாளர் வீரபாண்டியன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
விசிக ஏன் ஆதரவு?
இதில் பேசிய அவர், "திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் விசிக இடம்பெற்று 8 தொகுதிகளில் போட்டியிட்டதில் 2 தொகுதியில் நாங்கள் வெற்றி பெற்றோம்.

அதேபோல் இடதுசாரிகளும் தலா 2 இடங்களில் வெற்றி பெற்றன. மக்கள் நலக் கூட்டணி இருந்தபோதே கொள்கை அடிப்படையிலும், மக்கள் பிரச்சினைகளில் ஒருங்கிணைந்து களமாடி வருவதையும் பழக்கமாகக் கொண்டுள்ளோம்.
இந்தச் சூழலில் தொலைநோக்குப் பார்வையுடன் இணைந்து முடிவெடுப்போம் என்று கலந்து பேசினோம். முதலில் தவெகவுக்கு ஆதரவு என்ற முடிவை இடதுசாரிகள் எடுத்தார்கள்.
அதன் அடிப்படையில் விசிக உயர்நிலைக் கூட்டம் இணையவழியில் நடந்தது. உயர் நிலைக் கூட்டத்தில் பகிரப்பட்ட கருத்துகளின் அடிப்படையில், விசிக பொதுச் செயாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறப்பினரோடு கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுத்தோம்.
இந்த அரசியல் நெருக்கடியைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதற்காகவும், அதனைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவும் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.
தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றும், ஆட்சி அமைக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கையில், ஆட்சி அமைப்பதற்கு விசிக ஆதரவளிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்.
நாங்கள், திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில்தான் இருக்கிறோம். ஆனால், அரசியல் நெருக்கடியான இந்தச் சூழலில், அரசியல் கட்சியாக எங்களுக்கான சுதந்திரத்தைப் பயன்படுத்தி, இந்த நிலைப்பாட்டை எடுத்திருக்கிறோம்.
ஆளுநரைச் சந்தித்துவிட்டு, விசிக அலுவலகம் வருவதாக விஜய் சொன்னார். பதவியேற்பு நடந்துப் பிறகு வாருங்கள். இப்போது வர வேண்டிய கட்டாயம் இல்லை எனச் சொல்லியிருக்கிறேன்.
எங்களுடைய நிலைப்பாட்டை மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்தோம். அவர் எங்களுடைய நிலைப்பாட்டிற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்" என தெரிவித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |