சீமான் போட்டியிடும் தொகுதி இது தான்! நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் தொகுதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.
முக்கிய கட்சிகள் கூட்டணி குறித்து முடிவு செய்து வருகின்றன. முதற்கட்ட வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டன.
இந்நிலையில், இன்று நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் 234 தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்கான பொதுக்கூட்டம், சென்னை, இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ.திடலில் இன்று சற்று முன் துவங்கியது. இதில் 234 வேட்பாளர்களும் எந்தெந்த தொகுதியில் போட்டியிடுகின்றனர் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
அதன் படி, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுவதாகவும், நெய்வேலியில், கி.ரமேஷ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கூட்டத்தில் பேசி வரும் சீமான், அரசியலை லாபம் பெறும் தொழிலாக மாற்றி விட்டனர். கட்சிகளை குடும்ப சொத்துக்களாக மாற்றி விட்டனர். மாற்றத்திற்கான அரசியலை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கிறது.
பெண்களுக்கு 50 சதவீதம் கொடுப்பது எங்கள் கடமை, ஆண்களுக்கு இணையானவர்கள் பெண்கள் என்பது எங்கள் கோட்பாடு இல்லை, ஆணும் பெண்ணும் சமம் என்பதே எங்கள் கோட்பாடு என்று தொடர்ந்து பேசி வருகிறார்.
ஏற்கனவே சீமான், ஸ்டாலின் எந்த தொகுதியில் போட்டியிடுகிறாரோ அந்த தொகுதியில் தான் நான் போட்டியிடுவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.



