அதை மட்டும் செய்துவிடாமல் உறுதியாக இருங்கள்! சசிகலாவை சந்தித்த சீமான் அவரிடம் பேசியது இதுதான்.. முக்கிய தகவல்
சசிகலாவை சீமான் சந்தித்த நிலையில் இருவரும் என்ன பேசினார்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிறை வாசத்துக்கு பிறகு கடந்த 9ஆம் திகதி சென்னை வந்த சசிகலா வெளியாட்கள் யாரையும் சந்திக்காமல் இருந்தார்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் சில பிரமுகர்கள் சசிகலாவை அவரது தியாகராய நகர் வீட்டில் சந்தித்து பேசினார்கள்.
அதில் முக்கிய சந்திப்பாக பார்க்கப்பட்டது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - சசிகலா இடையிலான சந்திப்பு தான். சசிகலாவுடனான சந்திப்புக்கு பிறகு சீமான் செய்தியாளர்களை சந்திக்காததால் அவர் என்ன பேசினார் என்பது குறித்து தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் அது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி சீமானும் 2009 காலக்கட்டத்தில் சிறையில் இருந்திருக்கிறார்.
சசிகலாவும் நான்காண்டுகளாக சிறையில் இருந்துவிட்டு வந்திருக்கிறார். அதனால், சிறைசார்ந்த அனுபவங்களை சீமான் பகிர்ந்துகொண்டிருகிறார்.
அதே போல சசிகலாவின் சிறை அனுபவத்தையும் சீமான் கேட்டு கொண்டார் என்கிறார்கள்.
பின்னர் பா.ஜ.கவால் கடந்த நான்காண்டுகளில் பல்வேறு சோதனைகளைச் சந்தித்து விட்டீர்கள்.
தொடர்ந்து பா.ஜ.க எதிர்ப்பு என்பதில் மட்டும் உறுதியாக இருங்கள். கண்டிப்பாக அவர்கள், அ.தி.மு.க மற்றும் அ.ம.மு.க என்கிற இரண்டு கட்சிகளையுமே அழிக்கத்தான் நினைப்பார்கள்.
அதனால் , பா.ஜ.க ஆதரவு என்ற விடயத்தை மட்டும் செய்துவிடாதீர்கள் என கோரிக்கை வைத்திருக்கிறார்.
சீமான் சொன்னதை சசிகலா அதை கேட்டுக்கொண்டார், இருந்த போதும் அதற்கு பதில் ஏதும் சொல்லவில்லை என கூறப்படுகிறது.
