சசிகலா விடுதலையான பின்பு இது தான் நடக்கும்! ஆட்டத்தை முடிப்பார்: அடித்து கூறும் மு.க.ஸ்டாலின்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சசிகலா விடுதலையான பின்பு, அதிமுக ஆட்சியின் நிலை என்ன என்பது குறித்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பரப்புரையில் இறங்கியுள்ளன.
அந்த வகையில், திமுக தலைவரும் எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சபை என்ற கூட்டத்தை நடத்தி வருகிறார்.
அந்த கூட்டத்தில், பல்வேறு விஷயங்களை பேசி வருகிறார். அதன் படி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாதரை ஊராட்சியில் மக்கள் சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை. ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலன் மீது எவ்வித அக்கறையும் இல்லை.
குமாரபாளையம் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் பி.தங்கமணி இத்தொகுதிக்கு தொடர்ந்து எம்எல்ஏவாக இருக்கிறார்.
மின்வாரியத்தில் பல கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. அது தொடர்பாக ஆளுநரிடம் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது.
அவருக்கும் அந்த நகல் சென்றடைந்திருக்கும் என்று நம்புகிறேன். ஆனால் இதுவரை அது தொடர்பாக எந்தவித மறுப்போ, நீதிமன்றத்தில் வழக்கோ தொடரப்படவில்லை.
இதில் இருந்து உண்மை என்னவென்பது மக்களுக்குத் தெரியும். திமுக ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தோம்.
நீட் தேர் முதல்வராக இருந்த ஜெயலலிதாவும், ஏற்கவில்லை. ஆனால் தற்போதைய முதல்வராக உள்ள எடப்பாடி கே.பழனிசாமி நீட் தேர்வை ஆதரித்து விட்டார்.
இந்த தேர்வுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்பியும் பலனில்லை. திமுக ஆட்சிக்கு வந்ததும் குமாரபாளையம் தொகுதியின் அடிப்படை பிரச்னைகள் சாய ஆலைகளுக்கான பொது சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை ஏற்படுத்தப்படும்.
முதல்வர் டெல்லிக்கு சென்ற பயணம் விவசாய பிரச்னைகளை தீர்ப்பதற்காக அல்ல, வரும் 27-ஆம் திகதி சசிகலா வெளியே வரும்போது அதிமுக ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதால் தான் முதல்வர் அங்கு சென்றுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மக்களுக்கு தேவையான அனைத்து தேவைகளும் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.