நாங்கள் ஏழைகளாகி வருகிறோம்! நாடு முழுவதும் அறுவை சிகிச்சைகள் ரத்து, நீதிமன்றங்கள் மூடல்
போர்த்துக்கலில் பணவீக்கம் காரணமாக அனைத்து தொழிலாளர்களும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வேலைநிறுத்தம்
ஐரோப்பாவில் அதிக எரிசக்தி விலைகள் மற்றும் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக, பல நாடுகள் தொழிலாளர் போராட்டத்தை எதிர்கொள்கின்றன.
அந்த வகையில் போர்த்துக்கலிலும் வேலைநிறுத்த போராட்டம் மிகப்பெரிய அளவில் தொடங்கியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள பல பள்ளிகள் மற்றும் நீதிமன்றங்கள் மூடப்பட்டன.
மருத்துவமனை நியமனங்கள் மற்றும் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் குப்பைகளும் சேகரிக்கப்படாமல் விடப்பட்டுள்ளன.
@Reuters
பணவீக்கம்
வேலைநிறுத்தம் குறித்து தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் செபஸ்டியாவோ சந்தனா கூறுகையில், 'இந்த ஆண்டு அனைத்து தொழிலாளர்களும் ஏற்கனவே பணவீக்கம் காரணமாக ஒரு மாத சம்பளத்தை இழந்துள்ளனர். நாங்கள் ஏழைகளாகி வருகிறோம். நாங்கள் ஒரு நாள் ஊதியத்தை இழக்க விரும்புவதால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை.
நாங்கள் முன்வைத்த பிரச்சனைகளுக்கு அரசாங்கம் பதிலளிக்காததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். முக்கியமாக பணவீக்கத்தின் காரணமாக அதிக வாழ்க்கை செலவை ஈடுகட்ட வேண்டும்' என தெரிவித்துள்ளார்.
@Jose Manuel Ribeiro/Reuters
முன்னதாக, போர்த்துக்கலின் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 2023 வரவு செலவுத் திட்டத்தில், இறுதி வாக்கெடுப்புக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பெரும்பான்மையான சோசலிச அரசாங்கத்திற்கு சவால் விடுத்து, பணவீக்கத்திற்கு இடையில் ஊதிய உயர்வுகளைக் கோரி வெளிநடப்பு செய்தனர்.
தொழிற்சங்கமானது 10 சதவீத ஊதிய உயர்வையும், 2023ஆம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 யூரோக்கள் மாதம் ஒன்றுக்குக் கோருகிறது.
அதே சமயம் அரசாங்கம் சராசரியாக 3.6 சதவீத ஊதிய உயர்வை முன்மொழிந்துள்ளது. அடுத்த ஆண்டு பணவீக்கம் 4 சதவீதமாக இருக்கும் என்று அரசு கணித்துள்ளது.