கேரளாவில் சிறிய சிகிச்சைக்காக சென்ற 18 மாத குழந்தை: மயக்க மருந்தால் உயிரிழந்த சோகம்
கேரளாவில் சிறிய சிகிச்சைக்காக மருத்துவமனை சென்ற 18 மாத குழந்தை உயிரிழந்ததை அடுத்து மருத்துவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 மாதக் குழந்தை உயிரிழப்பு
கடந்த ஜூலை 5ம் திகதி கேரள மாநிலம் ஈரமாம்-குட்டூர் பகுதியைச் சேர்ந்த சூரஜ் மற்றும் விஜீஷா தம்பதியினரின் 18 மாதக் குழந்தை தேவாம்ஷ் செளர்யா விளையாடிக் கொண்டிருந்த போது கீழே விழுந்ததில் உதட்டில் காயம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் முதலுதவிக்காக குழந்தை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், உதட்டில் தையல் போடுவதற்காக பையனூரில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது.

மருத்துவமனையில் தையல் போடுவதற்காக குழந்தைக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்தில் குழந்தை சுயநினைவை இழந்தது.
இதனால் கண்ணூரில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட குழந்தை வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தன்னுடைய மகன் தேவாம்ஷ் செளர்யா உயிரிழப்பிற்கு மருத்துவர் அஞ்சலி பொதுவாள் தான் காரணம் என்று குற்றம்சாட்டி பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது பாரதிய நியாய சன்ஹிதா(BNS) பிரிவு 125-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனை விளக்கம்

குழந்தையின் உயிரிழப்பு தொடர்பாக பெற்றோர் தெரிவித்த குற்றச்சாட்டை பேபி மெமோரியல் மருத்துவமனை மறுத்துள்ளது.
குழந்தையின் உதட்டில் தையல் போடுவதற்காக மயக்க மருந்து கொடுக்கப்பட்ட போது எதிர்பாராத விதமாக குழந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
பின்னர் உடனடியாக குழந்தைக்கு வென்டிலேட்டர் பொறுத்தப்பட்டு அவசர சிகிச்சைக்கு மாற்றப்பட்டு உரிய சிகிச்சைகள் வழங்கியும் துரதிர்ஷ்டவசமாக குழந்தை உயிரிழந்தது.
தகுந்த சிகிச்சைகள் வழங்கப்பட்ட போதிலும், சில நேரங்களில் மயக்க மருந்தின் இத்தகைய பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது, குழந்தையை காப்பாற்ற எங்களால் முடிந்த அனைத்து மருத்துவ முயற்சிகளையும் மேற்கொண்டதாக மருத்துவமனை தரப்பு விளக்கமளித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |