நிலைமை மோசமடைந்தால் எங்களுக்கு இதை தவிர வேறு வழியே இல்லை! ஒலிம்பிக் தொடர்பில் ஜப்பான் முக்கிய அறிவிப்பு
கொரோனா பரவலால் நாட்டில் நிலைமை இன்னும் மோசமடைந்தால் டோக்கியோ ஒலிம்பிக் ரத்து செய்யப்படும் என ஜப்பானின் ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் பொதுச்செயலாளர் Toshihiro Nikai தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், எதிர்வரும் ஜூலை 23ம் திகதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவிருக்கிறது, இதில் சுமார் 10,000-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
ஜப்பானில் தற்போது 5,13,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், மக்கள் தொகையில் 0.4 சதவித பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
நாட்டிலேயே டோக்கியாவில் தான் அதிகபட்சமாக 1,26,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான சூழலில் கொரோனாவால் நிலைமை மோசமடைந்து ஒலிம்பிக்கை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், அதை கைவிடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என Toshihiro Nikai தெரிவித்துள்ளார்.
திங்களன்று Kyodo நடத்திய கருத்துக் கணிப்பில், டோக்கியோவில் கோடைகால ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஒத்திவைக்கப்பட வேண்டும் என்று ஜப்பானில் 70 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் கருதுகின்றனர் என்பதை காட்டுகிறது.