எரிவாயுக் குழாய் சேதப்படுத்தப்பட்ட விவகாரம்: சதிவேலையை உறுதி செய்த அதிகாரிகள்
ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்கள் சேதப்படுத்தப்பட்டதை ஸ்வீடன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளார்கள்.
எரிவாயு குழாய்கள் சேதம்
ரஷ்யாவிலிருந்து ஐரோப்பாவுக்கு குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்வதற்காக அமைக்கப்பட்ட திட்டம் Nord Stream என்னும் திட்டம்.
Nord Stream 1 என்னும் திட்டம் மூலம் ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு எரிவாயு அனுப்பப்பட்டு வந்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கெதிரான ஐரோப்பிய ஒன்றியத்தின் நடவடிக்கைகளில் ஜேர்மனியும் இணைந்துகொள்ள, ஆத்திரமடைந்த ரஷ்யா எரிவாயுவை குறைத்துக்கொண்டே வந்தது.
பின்னர் செப்டம்பர் மாதம் 26ஆம் திகதி, பால்டிக் கடலுக்கு அடியில் செல்லும் இந்த குழாய்களில் சேதம் ஏற்பட்டதால் எரிவாயு விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
Hannibal Hanschke/Reuters
சதிவேலை காரணமா?
Nord Stream 1 மற்றும் 2 திட்டங்களுக்காக அமைக்கப்பட்ட குழாய்களில் சேதம் ஏற்பட்ட நிலையில், அதற்கு சதிவேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில், எரிவாயுக்குழாயில் சேதம் ஏற்பட்டுள்ள பகுதியில் வெடிமருந்துப் பொருட்கள் சிறிதளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஸ்வீடன் மற்றும் டென்மார்க் அதிகாரிகள் இந்த விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவரும் நிலையில், ரஷ்யாவையும் ஜேர்மனியையும் இணைக்கும் Nord Stream 1 மற்றும் 2 திட்டங்களுக்காக அமைக்கப்பட்ட குழாய்களில் நான்கு துவாரங்கள் இருப்பது தெரியவந்தது.
தற்போது அந்த பகுதியில் வெடிமருந்துப் பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் சதிவேலை நடந்துள்ளது உறுதியாகியுள்ளதாக ஸ்வீடன் அதிகாரி ஒருவர் நேற்று தெரிவித்துள்ளார்.