ஐரோப்பிய நாடு ஒன்றில் இரண்டு ரயில்கள் மோதல்!
ஸ்பெயினில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 155 பேர் காயமடைந்தனர்.
ரயில்கள் மோதல்
ஐரோப்பிய நாடான ஸ்பெயினின் கட்டலோனியாவில், பார்சிலோனாவுக்கு சென்றுகொண்டிருந்த ரயில் ஒன்று Reixac-Manresa நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மீது வேகமாக மோதியது.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை. ஆனால், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 155 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவுவதற்காக ஏழு குழுக்களை அனுப்பினர்.
பெரியளவில் யாருக்கும் இந்த விபத்தில் காயம் ஏற்படாததால் குறைந்த எண்ணிக்கையிலான நபர்களுக்கு மட்டும் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.
விசாரணை முன்னெடுப்பு
இந்த விபத்து குறித்து மாநில ரயில் இயக்குனரின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'இந்த பாதையில் ரயில் போக்குவரத்து இரு திசைகளிலும் இடைநிறுத்தப்பட்டது மற்றும் என்ன நடந்தது என்பது குறித்து Renfe விசாரணையைத் தொடங்கியுள்ளது' என தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் கட்டலோனியாவில் பயணிகள் ரயிலின் மீது சரக்கு ரயில் மோதியதில், பயணிகள் ரயிலின் ஓட்டுநர் உயிரிழந்தார் மற்றும் 86 பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.