ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம்
2026 ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 28 ஆம் திகதி நடைபெற உள்ளது.
ஐபிஎல் தொடர், ஏழ்மை பின்னணியில் இருந்து வரும் திறமையாளர்களையும் அடையாளம் கண்டு, இந்திய அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்பை வழங்கி வருகிறது.
இதே போல், ஏழ்மை பின்னனியில் இருந்த பல வீரர்கள் 2025 ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்டுள்ளனர்.
மங்கேஷ் யாதவ்
அதில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த 23 வயதான மங்கேஷ் யாதவை(mangesh yadav) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.5.20 கோடிக்கு வாங்கியுள்ளது.

மங்கேஷ் யாதவின் தந்தை ராம் அவத் யாதவ் ஒரு லாரி ஓட்டுநர் ஆவார்.
மங்கேஷின் பெற்றோர் மற்றும் 3 சகோதரிகள் உட்பட 6 பேர் கொண்ட குடும்பம், போர்கானில் 10x10 அடி வாடகை வீட்டில் மாதம் ரூ.1,200 வாடகை செலுத்தி வசித்து வருகிறது.

மங்கேஷ் ஆரம்பகாலங்களில் டென்னிஸ் பந்துகளில் கிரிக்கெட் விளையாடியுள்ளார். அவரது தந்தை கடன் வாங்கி ரூ.23,000 உடன் அவரை டெல்லிக்கு பயிற்சி பெற அனுப்பி வைத்துள்ளார்.
ஒரு கட்டத்தில் அவரிடமிருந்த பணம் தீர்ந்ததும், பல நாட்கள் ரயில் நிலைய மேடைகளில் படுத்து உறங்கி, ஒருவேளை மட்டுமே உணவு உண்டு இருந்துள்ளார்.
அவரது திறமையை கண்ட பயிற்சியாளர் பூல்சந்த், தான் நடத்தி வந்த தங்கும் விடுதிக்கு அழைத்து வந்துள்ளார்.
ஒரு கட்டத்தில் மங்கேஷ் யாதவ் சோம்பேறித்தனமாக இருக்க, அவரை வீட்டிற்கு கிளம்புமாறு கூறியுள்ளார் பயிற்சியாளர், இனி இது போன்று நடக்காது என உறுதியளித்த மங்கேஷ், அதன் பின்னர் கடுமையான பயிற்சியை மேற்கொண்டுள்ளார்.
இதன் பின்னர், மத்தியப் பிரதேச டி20 லீக்கில் 6 போட்டிகளில் 12.00 என்ற சிறப்பான சராசரியில் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

மத்திய பிரதேச அணிக்க்காக விளையாடும் போது, RCB அணித்தலைவர் ரஜத் படிதாருடன் ஒரே உடைமாற்றும் அணியை பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதன் பின்னர் RCB அணியில் இருந்து தேர்வு போட்டிகளுக்கான அழைப்பு வந்துள்ளது.
முதல் ஓவர், 10வது ஓவர், டெத் ஓவர் என பல்வேறு கட்டங்களில் மங்கேஷை பந்துவீச சொல்லியுள்ளார் RCB பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக். அவரின் திறமையை கண்ட RCB அணி, ரூ.5.20 கோடிக்கு வாங்கியுள்ளது.
தந்தையின் பொருளாதார சிக்கல்
தனது பொருளாதார சிக்கல் குறித்து பேசிய அவரது தந்தை, “நான் பணத்திற்காக மிகவும் போராட வேண்டியிருந்தது. சில சமயங்களில், அவனுக்கு எப்படிப் பணம் திரட்டுவது என்று யோசித்துக்கொண்டே இரவில் என்னால் தூங்க முடியவில்லை.
ஒரு லாரி ஓட்டுநரின் வாழ்க்கை என்பதே ஒரு வாழ்க்கையே அல்ல. சாப்பிடவோ குளிக்கவோ கூட நேரம் இருக்காது. லாரி நிரம்பியிருக்கும்போது, சரக்குகளை இறக்குவதைப் பற்றியும், அது காலியாக இருக்கும்போது, அதை நிரப்புவதைப் பற்றியும் கவலைப்பட வேண்டும்.

சில சமயங்களில் அவன் தேர்வு முகாம் வரை சென்றிருப்பான், ஆனால் அவனது பெயர் தவறுதலாக அழைக்கப்பட்டுவிட்டது என்று அவனிடம் கூறப்படும். அந்த நாட்களில், இந்தக் கனவை அவனுக்கு கொடுத்ததன் மூலம் நான் ஒரு பெரும் தவறைச் செய்துவிட்டேனோ என்பது போல, நான் செய்வதறியாது தவித்தேன்” என கூறினார்.
இது குறித்து பேசிய மங்கேஷ் யாதவ் "நான் இன்று கிரிக்கெட் விளையாடுகிறேன் என்றால், அதற்குக் காரணம் பூல் சந்த் சார் தான். அவரின் கால்களைத் தொட்டு வணங்கி, என் மீது நம்பிக்கை வைத்து இவ்வளவு முதலீடு செய்ததற்காக அவருக்கு நன்றி சொல்ல விரும்பினேன்.
என் தந்தை கிரிக்கெட்டில் எனக்கு ஆதரவளித்தபோது, என் உறவினர்களும் சமூகமும் அவர் ஒரு முட்டாள் என்றும், நான் பாழாகிவிடுவேன் என்றும் நினைத்தார்கள். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் தந்தை இப்போது பெருமையுடன் நடக்க முடியும்" என கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |