ஒரேயடியில் 48 ஈரானியத் தலைவர்கள், 9 கடற்படைக் கப்பல்கள் துவம்சம்: பெருமை பேசும் ட்ரம்ப்
ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்டார் என்பதை உலகிற்கு உறுதிப்படுத்திய பின்னர், 48 ஈரானிய தலைவர்களை ஒரே தாக்குதலில் அழித்ததாக ஜனாதிபதி ட்ரம்ப் பெருமையாகக் கூறியுள்ளார்.
பேச்சுவார்த்தைகளுக்கு தயார்
அமெரிக்கப் படைகள் ஒன்பது ஈரானிய கடற்படைக் கப்பல்களை அழித்து மூழ்கடித்ததாகவும் அவர் தமது ட்ரூத் சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

எஞ்சியிருக்கும் ஈரானிய கப்பல்களை அமெரிக்கா குறிவைத்துள்ளதாகவும், மிக விரைவில் அவைகளும் கடலின் அடியில் மிதக்கும் என்றார். அத்துடன் ஈரானின் கடற்படை தலைமையகத்தின் பெரும்பகுதியை நாம் சிதைத்துள்ளோம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், ஈரானின் கடற்படை துணிச்சலுடன் செயல்படுகிறது என்பதை பதிவு செய்ய வேண்டும் என்றார். இதனிடையே, ஈரானின் புதிய தலைமையுடன் தாம் பேச்சுவார்த்தைகளுக்கு தயார் என்றும் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், காமெனி கொல்லப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஈரானிய அதிகாரிகள் ஒரு இடைக்கால ஆலோசகரை நியமித்துள்ளனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
ஃபாக்ஸ் செய்தி ஊடகத்திடம் பேசிய ட்ரம்ப், டசின் கணக்கான உயர் மட்ட ஈரானியத் தலைவர்களை அழித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதுடன், இன்னும் பல பேர்கள் தங்கள் பட்டியலில் உள்ளனர் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், ஆபரேஷன் Epic Fury வேகமாக முன்னேறி வருவதாகவும் ஜனாதிபதி கூறினார். இதனிடையே, ஈரான் தலைவர்கள் ஒரு பேச்சுவார்த்தைக்கு தற்போது தீவிரம் காட்டி வருவதாகவும், தாம் அதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரானிடம் ஒருபோதும்
ஆனால், யார் தொடர்பு கொண்டார்கள், எப்போது பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்பது தொடர்பிலான கேள்விகளுக்கு வழக்கம் போல அவர் பதிலளிக்க மறுத்துள்ளார்.
மேலும், இதுவரை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுவந்த தலைவர்களில் சிலர் சனிக்கிழமை நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு வளைகுடா நாடுகளில் இஸ்ரேலிடம் மட்டும் அணு ஆயுதங்கள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஈரானிடம் ஒருபோதும் அணு ஆயுதம் இருக்க முடியாது என்று ஜனாதிபதி பலமுறை குறிப்பிட்டுள்ளார்.
சனிக்கிழமை அதிகாலையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது கடுமையான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டன.
பதிலடியைத் தொடங்கிய ஈரான், இஸ்ரேல் மீதும், அமெரிக்காவின் பல அரபு கூட்டாளிகளான கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் பஹ்ரைன் மீதும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களால் பழி தீர்த்தது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |