நேட்டோ உச்சிமாநாட்டில் ட்ரம்ப் தங்கியிருந்த அறை வரை தகவல் திரட்டியிருந்த ஈரான்
Iran Knew Where Trump Was Staying: துருக்கியில் நேட்டோ உச்சிமாநாட்டின்போது ட்ரம்ப் தங்கியிருந்த அறையின் தகவல் வரை ஈரான் தெரிந்து வைத்திருந்தது.
கடந்த மாதம் துருக்கியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரகசியமாக விமானத்தை மாற்றிய அந்த அசாதாரண நடவடிக்கைக்கு, ஒரு தீவிரமான பாதுகாப்பு எச்சரிக்கையே காரணமாகக் கூறப்படுகிறது.
ஏவுகணைத் தாக்குதல்
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ட்ரம்ப் பயணப்படும் விமானத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தக்கூடும் என்பது குறித்த தகவலை அமெரிக்க உளவுத்துறை அறிந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நேட்டோ உச்சிமாநாட்டின் இறுதி நாளான ஜூலை 8 அன்று, ட்ரம்ப் அங்காராவிலிருந்து புறப்படத் தயாராகிக்கொண்டிருந்தபோது இந்த அச்சுறுத்தல் எழுந்தது.
அமெரிக்க ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ விமானமான 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' விமானத்தை இலக்கு வைக்கும் தரை-வான் ஏவுகணை தொடர்பான ஒரு குறிப்பிட்ட அச்சுறுத்தல் குறித்த பல்வேறு தகவல்களை அமெரிக்க உளவு அமைப்புகள் பெற்றிருந்ததாகவே, இந்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிந்த இரு அமெரிக்க அதிகாரிகள் நியூயார்க் டைம்ஸ் நாளேடிடம் தெரிவித்துள்ளனர்.
இது மட்டுமின்றி, நேட்டோ உச்சிமாநாடு நடைபெற்ற இடத்திற்கு அருகில், தோளில் வைத்து ஏவக்கூடிய ஏவுகணை ஒன்றை ஒருவர் எடுத்துச் சென்றதாகக் காணப்பட்டார் என்பது மற்றொரு கவலைக்குரிய தகவலாக இருந்தது.
மேலும், அங்காராவில் ட்ரம்ப் எங்கு தங்கியிருந்தார் என்பது குறித்தும், அவர் தங்கியிருந்த கட்டிடத்தின் எந்தத் தளத்தில் இருந்தார் என்பது குறித்தும் ஈரானிய உளவு அமைப்புகளுக்குத் துல்லியமாகத் தெரிந்திருந்ததாக அமெரிக்க உளவுத்துறையும் நம்பியது.
இதனையடுத்து, துருக்கியிலிருந்து ஜனாதிபதியை வெளியேற்றுவதற்காக ஒரு அசாதாரணமான நடவடிக்கையை முன்னெடுக்கும் அளவுக்கு அந்தத் தகவல்கள் நம்பகமானதாகக் கருதப்பட்டது.
ஈரானை நம்பவைக்க
இந்த நிலையிலேயே, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்திலேயே தாம் புறப்பட இருப்பதாக ட்ரம்ப் வெளிப்படையாக அறிவித்ததும், ஊடகங்களின் முன்னிலையில் அவர் அந்த விமானத்தில் ஏறுவதும் ஊடகங்கள் பதிவு செய்தன.
ஆனால் உண்மையில் அது ஈரானை நம்பவைக்கும் ஒரு திட்டம். அந்த விமானமானது வெள்ளை மாளிகை அதிகாரிகள், பாதுகாப்புப் பணியாளர்கள், துணைப் பணியாளர்கள் மற்றும் பயணத்தை மேற்கொள்ளும் செய்தியாளர்கள் குழுவினர் ஆகியோருடன் குறித்த நேரத்தில் புறப்பட்டு சென்றது.

ட்ரம்பை, விமான நிலைய உணவு வழங்கும் கொள்கலனுக்குள் வைத்து விமான நிலையத்தில் இருந்து ரகசியமாக வெளியேற்றி, பின்னர் ஒரு சிறிய இராணுவ விமானத்திற்கு மாற்றப்பட்டு, துருக்கியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் ட்ரம்ப் ஊடகங்களிடம் இதுவரை விளக்கமளிக்கவில்லை என்பதுடன், அதிகாரிகள் ஆலோசனைகளுக்கு தாம் கட்டுப்பட்டதாக மட்டுமே பதிலளித்துள்ளார்.
ஆனால், பத்திரிகையாளர்களில் சிலர், தாங்கள் பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டதற்கு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியதோடு, பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கத் தவறியதற்காக வெள்ளை மாளிகை அதிகாரிகளையும் விமர்சித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |