ஈரானுடன் பேச்சுவார்த்தை... ஆசிய நாடொன்றின் உதவியை நாடும் அமெரிக்கா
எண்ணெய் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர, ஈரானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக டொனால்ட் ட்ரம்பின் மத்திய கிழக்குத் தூதர் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெறும் கட்டுக்கதை
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மத்தியஸ்தராகச் செயல்பட பாகிஸ்தான் முன்வந்துள்ளதை அடுத்து, ஸ்டீவ் விட்காஃப் இஸ்லாமாபாத் பயணப்பட்டிருப்பது, போருக்கு ஒரு இராஜதந்திரத் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையைத் தூண்டியுள்ளது.

48 மணி நேரத்தில் ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட வேண்டும், அல்லது ஈரானின் அணுமின் நிலையங்கள் தாக்குதலுக்கு இலக்காகும் என மிரட்டல் விடுத்திருந்த ட்ரம்ப், திடீரென்று அதில் இருந்து பின்வாங்கினார்.
மட்டுமின்றி, திடீரென, இனி போர்கள் இல்லை, இனி அணு ஆயுதங்கள் இல்லை, ஆட்சி மாற்றம் ஆகியவற்றுக்கு ஒப்புக்கொள்ளும் விளிம்பில் ஈரான் இருப்பதாகவும் அவர் கூறினார்.
மேலும், ஈரானில் தற்போது எஞ்சியுள்ள மிகவும் மரியாதைக்குரிய தலைவர் ஒருவருடன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து அணுமின் நிலையங்கள் மீதான தாக்குதல்களை 5 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஆனால், உலகம் அறியாத, ஈரானில் தற்போது எஞ்சியுள்ள அந்த மரியாதைக்குரிய தலைவர் யார் என்பதை ட்ரம்ப் வெளியிட மறுத்துள்ளார். டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களுடன் பேசி முடித்த சில நிமிடங்களில், ஈரான் தரப்பில் இருந்து அது வெறும் கட்டுக்கதை என பதிலளிக்கப்பட்டுள்ளது.

மட்டுமின்றி, ஈரானுடன் பேசுவதாக தகவல் வெளியிட்டு, பொருளாதார சந்தைகளை மீட்டெடுக்க ட்ரம்ப் நாடகமாடுகிறார் என்றும் ஈரான் தரப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவுடன் எந்த நேரடிப் பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கவில்லை என்றும் ஈரான் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
அத்துடன், இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கக் கூட்டாளிகளுக்கும் எதிராக, பேச்சுவார்த்தைக்கான நம்பிக்கையை முற்றிலுமாக அகற்றிவிடும் வகையிலான சிறப்பு கொண்டாட்டம் ஒன்றை ஈரான் திட்டமிட்டு வருவதாகவும் Fars செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டிருந்தது.
போலிச் செய்திகள்
இதன் ஒருபகுதியாக இஸ்ரேலில் யூதர்களால் உருவாக்கப்பட்ட முதல் நகரமான டெல் அவிவ் மீதும், குவைத், சவுதி அரேபியா மீதும் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டது. இதில் டெல் அவிவ் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, ஸ்டீவ் விட்காஃப் மற்றும் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகிய இரு தொழிலதிபர்களும் இந்த வாரம் இஸ்லாமாபாத்தில், ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபுடன் ஒரு சந்திப்புக்கு ஏற்பாடு செய்ய முயற்சிக்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானுடன், எகிப்து, துருக்கி மற்றும் கத்தாரும் ஈரானுடன் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க போராடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, அமெரிக்கா தம்மை தொடர்புகொள்ளவில்லை என ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃபும் மறுத்துள்ளார்.
அத்துடன், நிதிச் சந்தைகளையும் எண்ணெய் சந்தைகளையும் கையாளுவதற்கும், அமெரிக்காவும் இஸ்ரேலும் சிக்கிக்கொண்டுள்ள இக்கட்டான நிலையிலிருந்து மீள்வதற்கும் போலிச் செய்திகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |