ஈரான் மீது தாக்குதலை தொடங்கும் அமெரிக்கா? G7 மாநாட்டில் பாதியிலே வெளியேறிய டிரம்ப் - பின்னணி என்ன?
G7 மாநாட்டில் இருந்து டிரம்ப் பாதியிலே வெளியேறியுள்ள நிலையில், ஈரானை அமெரிக்கா தாக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
ஈரான் இஸ்ரேல் தாக்குதல்
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக கூறி, கடந்த 13 ஆம் தேதி இஸ்ரேல் அதன் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானும் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரான் மீதான இந்த தாக்குதலுக்கு, அமெரிக்கா இஸ்ரேலுக்கு உதவினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவின் ராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் எச்சரித்தது.
அமெரிக்காவின் நிலைகள் தாக்கப்பட்டால், அமெரிக்கா தனது முழு ராணுவ பலத்துடன் பதிலடி கொடுக்கும் என டிரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்த சூழலில், நேற்று ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் உள்ள அமெரிக்கா தூதரகத்தில் சேதம் ஏற்பட்டுள்ளது.
G7 மாநாட்டில் வெளியேறிய டிரம்ப்
இதனையடுத்து ஈரான் இஸ்ரேல் போர் குறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், "ஈரான் நான் கையெழுத்திடச் சொன்ன ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்க வேண்டும். மனித உயிர்களின் வீண் மரணத்திற்கு ஈரான் காரணமாக மாறி வருகிறது.
ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க முடியாது. இதனை நான் திரும்பத் திரும்பச் சொல்கிறேன். அனைவரும் உடனடியாக டெஹ்ரானை காலி செய்யுங்கள்" என தெரிவித்தார்.
இந்நிலையில், கனடாவில் நடைபெறும் G7 மாநாட்டில் இருந்து பாதியில் இருந்து வெளியேறிய அமெரிக்கா அதிபர் டிரம்ப், அமெரிக்கா விரைகிறார்.
அங்கு வெள்ளை மாளிகையில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலை, வெள்ளை மாளிகையின் சிச்சுவேஷன்(Situation) அறையில் தயாராக இருக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.
அலி காமெனிக்கு குறி?
மேலும், அவர் வெளியிட்ட பதிவில், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் நான் ஈரான் இஸ்ரேல் போரில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வாஷிங்க்டன் செல்வதாக தெரிவித்துள்ளார். பேச்சு வார்த்தைக்கு இடமில்லை. அதை விட பெரிதாக ஒன்று நடக்க உள்ளது என தெரிவித்துள்ளார்.
ஏற்கனேவே அமெரிக்கா தனது எரிபொருள் நிரப்பும் விமானங்களை மத்திய கிழக்கு நோக்கி நகர்த்தி வருகிறது. மேலும், தனது விமானம் தாங்கிய போர் கப்பல்களையும்(GSC) மத்திய கிழக்கு நோக்கி நகர்த்தியுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்கா ஈரான் மீது பெரியளவிலான வான் வழி தாக்குதலை நடத்த வாய்ப்பு உள்ளதாக ராணுவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஈரானின் உச்சத்தலைவர் அலி காமெனி கொல்லப்பட்டால் தான் போர் முடிவுக்கு வரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ள நிலையில், இந்த தாக்குதலில் அலி காமெனி குறி வைக்கப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |