இரண்டு வார போர் நிறுத்தத்தை அறிவித்த ட்ரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீதான தாக்குதலை இரண்டு வாரம் ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.
"இன்று இரவு ஒரு முழு நாகரீகமும் அழியப்போகிறது" என ஈரானுக்கு எதிராக கடுமையான அச்சுறுத்தலை விடுத்திருந்த நிலையில், காலக்கெடுவிற்கு கடைசி இரண்டு மணிநேரங்களுக்கு முன் ட்ரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
மேலும், இந்த அறிவிப்பானது ஒரு நிபந்தனையுடன் வந்துள்ளது.
இந்த இரண்டு வார போர் நிறுத்தம் என்பது, ஈரான் அரசு ஹார்முஸ் நீரிணையை முழுமையாக, உடனடியாக மற்றும் பாதுகாப்பாக திறப்பதற்கு ஒப்புக்கொள்வதற்கு உட்பட்டது என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஈரான் இன்னும் உத்தியோகபூர்வமாக ஹார்முஸ் நீரிணையை திறப்பதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது.
ட்ரம்ப் தனது Truth Social பதிவில், பாகிஸ்தான் முன்வைத்த இரண்டு வார போர்நிறுத்தத் திட்டத்தை ஈரான் ஏற்றுக்கொண்டதாகவும், இந்த காலத்தில் இறுதி அமைதி ஒப்பந்தத்தை நோக்கி முன்னேறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
“எங்கள் இராணுவ இலக்குகள் நிறைவேறிவிட்டன. இப்போது நீண்டகால அமைதி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன.” என்று அவர் கூறியுள்ளார்.
ஈரான் வெளிவிவகார அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, “அமெரிக்க தாக்குதல்கள் நிறுத்தப்பட்டால், எங்கள் ஆயுதப்படைகள் தற்காப்பு நடவடிக்கைகளை நிறுத்தும். இரண்டு வாரங்களுக்கு ஹார்முஸ் வழியாக பாதுகாப்பான கடற்பயணம் சாத்தியம்” என்று அறிவித்தார்.
இந்த முடிவுக்கு சீனாவின் தலையீடு முக்கிய பங்காற்றியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் புதிய உச்சத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி, பாகிஸ்தான் முன்மொழிந்த போர்நிறுத்ததை ஏற்றுக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
போர் தொடங்கிய நாள் (பிப்ரவரி 28) முதல், இதுவரை ஈரானில் 1,900 பேர் உயிரிழந்துள்ளனர். லெபனானில் ஹிஸ்புல்லா-இஸ்ரேல் மோதலில் 1,500 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலில் 23 பேர், அமெரிக்காவில் 13 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த இரண்டு வார போர்நிறுத்தம், மத்திய கிழக்கு அமைதிக்கான முக்கிய வாய்ப்பாக உலகம் முழுவதும் பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |