ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்க நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தம்
ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
அமெரிக்கா-ஈரான் இடையிலான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல்களை வெளியேற்றும் “Project Freedom” எனப்படும் அமெரிக்க இராணுவ நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ட்ரம்ப் தனது Truth Social தளத்தில், “பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளின் வேண்டுகோளின் அடிப்படையில், ஈரானுடன் இறுதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதால், நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஹார்முஸ் நீரிணையில் ஈரான் கப்பல்கள், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழித்ததாகவும், பல வணிகக் கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈரானின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்து தன் வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்ததாக ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது.
அமெரிக்க வெளிவிவகார செயலாளர் மார்கோ ரூபியோ, “ஹார்முஸ் நீரிணை ஈரானுக்குச் சொந்தமானது அல்ல. உலகின் முக்கியமான நீரிணையை மூடுவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது” என்று கூறியுள்ளார்.
ஈரான் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை. ஆனால், வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்து வருவதால், இந்த தற்காலிக நிறுத்தம் அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும் என சிலர் நம்புகின்றனர்.
இந்த முடிவு, உலகளாவிய எண்ணெய் விலை மற்றும் கடல்சந்தி பாதுகாப்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சர்வதேச சமூகத்தின் கவனம் தற்போது ஹார்முஸ் நீரிணை நோக்கி திரும்பியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |