ஹார்முஸை திறந்தால்., ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட டிரம்ப் திட்டம்
ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட்டால் ஈரான் உடனான புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட டிரம்ப் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்பின் புதிய திட்டம்
வணிக கப்பலின் போக்குவரத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் ஈரான் திறந்து விட்டால் ஈரானிடம் பெற திட்டமிட்டு இருந்த புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை கைவிட அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தயாராக இருப்பதாக The Wall Street Journal செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அணுசக்தி ஒப்பந்தத்தை வலியுறுத்துவதற்கு பதிலாக, சர்வதேச அளவில் முக்கியமான நீர்வழி வணிக பாதையான ஹார்முஸை எந்தவொரு தடையும் இன்றி மீண்டும் திறந்து விடுவதற்காக பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள இராணுவ முற்றுகையை கைவிடவும், தற்போதுள்ள போர் நிறுத்தத்தை தொடரவும் டிரம்ப் அரசு ஒப்புக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக இதற்கான சூழலை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உருவாக்கி வருவதாகவும், ஈரானுடன் புதிய அணுசக்தி ஒப்பந்தத்தை பெற முடியாவிட்டாலும், போர் நடவடிக்கைகளில் இருந்து விலகிச் செல்லலாம் என்று தன்னுடைய மூத்த ஆலோசகர்களுடன் தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் ஹார்முஸ் நீரிணையை திறப்பது குறித்து ஈரான் பல்வேறு நிபந்தனைகளை விதிப்பதாக கூறப்படுகிறது.
ஈரானின் நிபந்தனைகள்

போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்கல், அமெரிக்க கடற்படை முற்றுகையை திரும்ப பெறுதல், பொருளாதார தடைகளை நீக்குதல் மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஈரானிய சொத்துகளை விடுவித்தல் ஆகியவற்றை ஈரான் கோருவதாக கூறப்படுகிறது.
இந்த கோரிக்கைகளின் காரணமாக அமெரிக்காவின் ராஜதந்திர முடிவுகளில் தெளிவு குறைந்து இருப்பதாகவும், ஈரான் நீண்ட கால மோதலுக்கு தயாராகி வருவதாக தெரிகிறது என்று The Wall Street Journal தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |