ஈரான் அறிவிப்பைப் புறந்தள்ளிய ட்ரம்ப்: வலுக்கும் உரிமைகோரல் போராட்டம்
ஹார்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டிற்காக இரு தரப்பினரும் போட்டியிட்டு வரும் நிலையில், அந்த நீரிணையை மூடிவிட்டதாக ஈரான் அறிவித்துள்ளதை டொனால்ட் ட்ரம்ப் நிராகரித்துள்ளார்.
போர்நிறுத்தம் முறியும்
இதனால், கடந்த மாதம் ஒப்புக்கொள்ளப்பட்ட போர்நிறுத்தம் முறியும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஹார்முஸ் நீரிணையில் ஈரான் ஒரு வணிகக் கப்பலைத் தாக்கிச் செயலிழக்கச் செய்ததைத் தொடர்ந்து,
சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஈரானில் 140 இலக்குகளைத் தாக்கியதாக அமெரிக்கப் படைகள் தெரிவித்துள்ளன.

குறித்த கப்பலானது ஹார்முஸ் நீரிணையில் பயணப்பட அனுமதி அளிக்கப்படவில்லை என்றே ஈரான் வாதிட்டுள்ளது. இந்த நிலையில், அமெரிக்க மத்திய கட்டளை மையம் (Centcom) வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஏவுகணை மற்றும் ட்ரோன் தளங்கள், கடற்படை வசதிகள், வெடிமருந்து கிடங்குகள், தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் கண்காணிப்பு மையங்கள் ஆகியவை இலக்கு வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இதனையடுத்து வளைகுடா முழுவதும் உள்ள அமெரிக்க முகாம்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம் ஈரான் ஞாயிற்றுக்கிழமை பதிலடி கொடுத்தது.
ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஜோர்டான், பஹ்ரைன் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளிலும் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டுள்ளதாக IRGC அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், சில கப்பல்கள் தொடர்ந்து வெளியேறி வருவதாக Centcom தெரிவித்துள்ளது.
மேலும், ஹார்முஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், கப்பல்கள் தொடர்ந்து பயணிப்பதாகவும் Centcom தலைமையகம் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, அமெரிக்க இராணுவம் வலுக்கட்டாயமாக அந்த நீரிணையைத் திறந்து வைத்திருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஈரான் மீதான கடும் குண்டுவீச்சை அடுத்து, ஹார்முஸ் நீரிணை தற்போது திறந்தே இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நடைமுறைக்கு வரவில்லை
மேலும், ஈரானியர்கள் மிகவும் தீயவர்கள், வக்கிரமான குணம் கொண்டவர்கள். நாங்கள் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். நேற்று அவர்கள் ஒரு ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டார்கள்; அது எங்களுக்கு மிகச் சிறந்த ஒரு ஒப்பந்தம்.
அவர்கள் அனைத்தையும் கைவிட்டனர். அதன்பிறகு, அந்த அறையை விட்டு வெளியேறினர். பின்னர், ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே ஒரு கப்பலின் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தினர் என ட்ரம்ப் விளக்கமளித்துள்ளார்.
ஆனால் ட்ரம்பின் சனிக்கிழமை ஒப்பந்தம் தொடர்பில் வெள்ளை மாளிகை எந்த உறுதியான தகவலையும் வெளியிடவில்லை. மட்டுமின்றி, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும், ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் ஈரானும் குறிப்பிடவில்லை.

இதனால் ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப் மீண்டும் தனது இயலாமையை வெளிப்படுத்தியுள்ளதாகவே கூறுகின்றனர். ஜூன் 17 ஆம் திகதி ஒப்புக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தமானது ஹார்முஸ் நீரிணை வழியாக வர்த்தகத்தை மீண்டும் தொடங்கவும்,
ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையே முக்கிய கருத்து வேறுபாடுகளாக உள்ள ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் பொருளாதாரத் தடைகள் மீதான தளர்வு குறித்த பேச்சுவார்த்தைகளுக்குச் சற்று அவகாசம் அளிக்கவும்,
ஈரான் போரில் மேற்கொள்ளப்பட்டிருந்த போர்நிறுத்த ஒப்பந்தம் மேலும் 60 நாட்களுக்கு நீட்டிக்க உறுதி செய்வதாகும். ஆனால், சில மறைமுகத் தொழில்நுட்பப் பேச்சுவார்த்தைகளைத் தவிர, அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது நடைமுறைக்கு வரவில்லை;
மேலும், அந்த ஒப்பந்தத்தின் வரம்பிற்குள் அடங்கியிருக்க வேண்டிய லெபனானில், இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையிலான மோதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், பிப்ரவரியில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு கைப்பற்றப்பட்ட அந்த நீரிணை மீதான தங்களது கட்டுப்பாட்டை, இப்பிராந்தியத்திலான எந்தவொரு நீண்டகாலத் தீர்வுத் திட்டமும் அங்கீகரிக்க வேண்டும் என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.
மட்டுமின்றி, இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடம் டசின் கணக்கான அணு குண்டுகளை விடவும் முக்கியமானது; ஈரான் இதைப் பாதுகாக்கும் என ஈரானின் உயரிய தலைவர் மொஜ்தபா கமேனியின் மூத்த ஆலோசகரான மொஹ்சென் ரெஸாயி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, அமெரிக்காவின் தலையீடு முடிவுக்கு வரும் வரை அந்த நீரிணை மூடப்பட்டே இருக்கும் என்று IRGC தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |