அமெரிக்க தலைநகரம் முற்றுகை: பாதுகாப்பு தேடி துணை ஜனாதிபதி ஓட்டம்
ஜோ பைடனுக்கான தேர்தலுக்கு காங்கிரஸ் சான்றிதழ் வழங்கியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டதை அடுத்து கடும் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
போராட்டக்கரர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஜன்னல்களை அடித்து நொறுக்கியதுடன், நாடாளுமன்ற கட்டிடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
மிகப்பெரிய பாதுகாப்பு மீறல் இதுவென கூறப்படும் நிலையில், ஜனாதிபதி டிரம்பின் பேச்சை ஏற்று ஜோ பைடனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மறுத்த துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் போராட்டக்காரர்களின் கோபத்திற்கு இலக்கானதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் சிறப்பு பொலிசாரால் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சபை வாசல்களில் ஆயுதமேந்திய காவலர்கள் நிலைகொண்டதால், சபைக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
மட்டுமின்றி, செனட்டில் தலைமை வகிக்கும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் சபையில் தலைமை வகிக்கும் சபாநாயகர் நான்சி பெலோசி ஆகியோர் தங்களது சொந்த பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில் அந்தந்த அறைகளில் இருந்து பாதுகாப்பாக அகற்றப்பட்டனர்.
முன்னதாக ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இரு அவைகளிலும் மொத்தமுள்ள 535 உறுப்பினர்களுக்கும் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கடிதம் எழுதியிருந்தார்.
மேலும், ஜனாதிபதி டிரம்பின் அச்சுறுத்தலுக்கு தாம் ஒருபோதும் பணியப்போவதில்லை எனவும் அரசியலமைப்பின் படியே நடந்துகொள்ள இருப்பதாகவும் மைக் பென்ஸ் தெரிவித்திருந்தார்.
இதனிடையே தேர்தல்சபை வாக்குகளை நாடாளுமன்ற இரு அவைகளிலும் எண்ணத் தொடங்குவதற்கு சற்று முன்னர், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தமது அழைப்பின் பேரில் தலைநகரில் குவிந்துள்ள தனது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களை ஆதரித்து உரையாற்றினார்.
தேர்தல்சபை வாக்குகள் எண்ணப்பட்டு, ஜோ பைடனை அடுத்த ஜனாதிபதியாக ஏற்கும் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துவதே ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் முக்கிய திட்டமாக இருந்தது என கூறப்படுகிறது.
தற்போது தமது ஆதரவாளர்களை சபைக்குள் அத்துமீறி நுழையவைத்து தமது திட்டத்தை டொனால்டு டிரம்ப் நிறைவேற்றியுள்ளார் என்றே கூறப்படுகிறது.



