பகிரங்கமாக வெடித்த மோதல்... எலோன் மஸ்க்கின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ட்ரம்ப் மிரட்டல்
ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் எலோன் மஸ்க் இடையேயான கருத்துவேறுபாடு மோதலாக வெடித்த நிலையில், மஸ்கின் அரசாங்க ஒப்பந்தங்களை ரத்து செய்ய இருப்பதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
ஏமாற்றமடைந்துள்ளதாக ட்ரம்ப்
எலோன் மஸ்கின் சமீபத்திய நடவடிக்கைகளால் தாம் ஏமாற்றமடைந்துள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தமது சமூக ஊடககத்தில் பதிவிட்ட சில மணி நேரங்களில், மஸ்கும் தகுந்த பதிலளித்துள்ளார்.
இருவருக்கும் இடையேயான இந்த கருத்து மோதல் பகிரங்கமாக வெடித்த நிலையில், டெஸ்லா பங்குகள் 9 சதவீதம் வரையில் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. மட்டுமின்றி, மஸ்கிற்கு எதிராக அரசாங்கத்தைப் பயன்படுத்த முடியும் என்றும் ட்ரம்ப் அச்சுறுத்தியுள்ளார்.
பட்ஜெட்டில் பில்லியன் கணக்கான டொலர்கள் பணத்தை மிச்சப்படுத்துவதற்கான எளிதான வழி, எலோனின் அரசாங்க மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாகும் என்று ட்ரம்ப் தனது சமூக ஊடக பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மட்டுமின்றி, எலோன் மஸ்கிற்கு எதிராக ஜோ பைடன் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காதது எனக்கு எப்போதும் ஆச்சரியமாக இருந்தது என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதிக்கும் உலகின் மிகப் பெரிய பணக்காரருக்கும் இடையிலான உறவு முறிவு, அவர்களின் நெருக்கம் தொடங்கியதைப் போலவே - வேகமாகவும், தீவிரமாகவும், மிகவும் வெளிப்படையாகவும் முடிவுக்கு வந்துள்ளது.
வரி குறைப்பு மற்றும் செலவுத் திட்டங்களில் ஜனாதிபதி கையெழுத்திட்ட மசோதாவை மஸ்க் கடுமையாக விமர்சித்ததை அடுத்து, மஸ்க் மீது தான் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள மஸ்க், தமது செல்வாக்கு இல்லை என்றால், ட்ரம்ப் தேர்தலில் தோல்வியை எதிர்கொண்டிருப்பார் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் நன்றியில்லாத நபர் என்றும் ட்ரம்பை மஸ்க் விமர்சித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது ட்ரம்பிற்கு ஆதரவாக களமிறங்கிய எலோன் மஸ்க் சுமார் 250 மில்லியன் டொலர் தொகையை தேர்தல் வெற்றிக்காக செலவிட்டுள்ளார்.
ட்ரம்பின் கொள்கை
இதன் காரணமாக மஸ்க் நெருங்கிய ஆலோசகராகவும் அடிக்கடி சந்திக்கும் தோழராகவும் ஆனார். மட்டுமின்றி, வெள்ளை மாளிகையில் இரவு தங்கிச் செல்லும் அளவிற்கு மஸ்க் செல்வாக்கு பெற்றார்.
ஆனால் ட்ரம்ப் முன்வைக்கும் மசோதா காரணமாக இருவருக்கும் கருத்துவேறுபாடு உருவானது. ட்ரம்பின் இந்த மசோதா டிரில்லியன் கணக்கான டொலர் வரி குறைப்பை ஏற்படுத்தும் மற்றும் செலவினங்களைக் குறைக்கும், அடுத்த பத்தாண்டுகளுக்கு பற்றாக்குறையை 2.4 டிரில்லியன் டொலர் என அதிகரிக்கும்.
மட்டுமின்றி சுமார் 10.9 மில்லியன் மக்களை சுகாதார காப்பீட்டுக்கு வாய்ப்பில்லாமல் செய்துவிடும். ட்ரம்பின் கொள்கை இதுவென அறிந்ததன் பின்னர் இந்த மசோதாவை எலோன் மஸ்க் கடுமையாக எதிர்க்கத் தொடங்கினார்.
பணத்தை சேமிக்க வேண்டும் என பல ஆயிரம் மக்களை அரசாங்க வேலையில் இருந்து வெளியேற்றிய ட்ரம்ப் நிர்வாகம் தற்போது வரி குறைப்பு நடவடிக்கைகளால் பற்றாக்குறையை ஏற்படுத்த இருப்பதாக மஸ்க் பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |