ஈரானுக்கு எதிராக மிகக் கடுமையான பொருளாதார நடவடிக்கை - ட்ரம்ப் அறிவிப்பு
Trump announces economic operation against Iran: ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
கடுமையான பொருளாதார நடவடிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் ஈரானுக்கு எதிராக இதுவரை இல்லாத அளவிற்கு கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார்.
“ஈரான் ஒப்பந்த வாய்ப்பை பயன்படுத்தத் தவறிவிட்டது. இனி இது வரை இல்லாத அளவிற்கு பொருளாதார போர் மற்றும் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ளும்,” என்று அவர் Truth Social-ல் பதிவிட்டுள்ளார்.

ஈரானை தனிமைப்படுத்த திட்டம்
ட்ரம்ப், ஈரானுடன் வணிகம் செய்யும் எந்த நாட்டுக்கும் கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.
“எண்ணெய் வர்த்தகம், பணப் பரிமாற்றம், கப்பல் போக்குவரத்து, வணிக நிறுவனங்கள், இவை அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். ஈரானை தனிமைப்படுத்த அமெரிக்க கூட்டாளிகள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் திசை திருப்பும் முயற்சி
ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அராக்சி, இந்த நடவடிக்கையை “அமெரிக்காவின் சொந்த நெருக்கடியிலிருந்து கவனத்தை திசை திருப்பும் முயற்சி” எனக் கூறியுள்ளார். மேலும், “அமெரிக்காவின் இந்த பொருளாதார பயங்கரவாதம் உலக பொருளாதாரத்தையும் இறையாண்மையையும் அச்சுறுத்துகிறது,” என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே ஐக்கிய அரபு அமீரகம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் ஈரானுடன் உள்ள அனைத்து நிதி தொடர்புகளையும் நிறுத்தியுள்ளதாகவும் UAE தெரிவித்துள்ளது. ஆனால், ஈரான் இதனை மறுத்து, “தவறான குற்றச்சாட்டு” என தெரிவித்துள்ளது.
ட்ரம்ப் நடவடிக்கைகள் சீனா, ஈராக், துருக்கி போன்ற ஈரானின் முக்கிய வர்த்தக கூட்டாளிகளையும் பாதிக்கக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால், சீன அரசு தனது நிறுவனங்களுக்கு அமெரிக்க தடைகளை பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளதால், அமெரிக்காவிற்கு முழுமையான கட்டுப்பாடு சாத்தியமில்லை எனவும் கூறப்படுகிறது.
ட்ரம்பின் இந்த அறிவிப்பு, ஐந்து மாதங்களாக நீடிக்கும் அமெரிக்கா-ஈரான் மோதலில் புதிய கட்டத்தை உருவாக்கியுள்ளது. உலக பொருளாதாரத்திலும் அதிர்வுகளை ஏற்படுத்தும் அபாயம் அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |