சுற்றுலா சென்ற இடத்தில் ஜேர்மன் குடும்பத்துக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல்
துருக்கிக்கு சுற்றுலா சென்ற ஜேர்மானியக் குடும்பம் ஒன்று, food poisoning எனும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டு குடும்பத்தில் மூன்று பேர் பலியான விடயம் தொடர்பில் மேலும் சோகத்தை ஏற்படுத்தும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

வெளியில் சாப்பிட்ட உணவு...
ஜேர்மனியின் ஹாம்பர்க் நகரைச் சேர்ந்த ஒரு குடும்பம் துருக்கி நாட்டிலுள்ள இஸ்தான்புல் நகருக்கு சுற்றுலா சென்றுள்ளது.
கடந்த புதன்கிழமையன்று பல இடங்களை சுற்றிப் பார்த்த அந்தக் குடும்பத்தினர், Ortakoy என்னும் பிரபல சுற்றுலாத்தலத்தில் அமைந்துள்ள தெருவோரக் கடைகளில் விற்கப்படும் பிரபல உணவு வகைகளை சுவைத்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து அவர்களுடைய உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படவே, அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
அவர்கள் நான்குபேரும் food poisoning எனும் பிரச்சினையால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் நிலையில், தம்பதியரின் 6 மற்றும் 3 வயதுடைய இரண்டு பிள்ளைகளும் சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து, சிறிது நேரத்தில் பிள்ளைகளின் தாயும் உயிரிழக்க, அவரது கணவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.
இந்நிலையில், அவரும் நேற்று, அதாவது, திங்கட்கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், அவர்கள் தங்கியிருந்த ஹொட்டலிலிருந்த மற்றவர்களும் தற்போது அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், அந்த ஹொட்டலில் உணவு தயாரிப்பது கிடையாதாம். சுற்றுலாப்பயணிகள் வெளியே சென்றுதான் உணவு அருந்தவேண்டும். இங்கு தண்ணீர் மட்டும்தான் கிடைக்கும் என்கிறார்கள் ஹொட்டல் உரிமையாளர்கள்.
ஆனால், அந்த ஹொட்டலின் சில அறைகளில் சமீபத்தில் பூச்சி மருந்து அடிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த ஜேர்மானியர்கள், கடல் உணவுகள், கோழிக்கறி, கன்றுக்குட்டியின் குடல், சூப், துருக்கி நாட்டு இனிப்புகள் என பல உணவுகளை சாப்பிட்டுள்ளார்கள்.

ஆக, அவர்களுடைய உடல் நலம் பாதிக்கப்பட என்ன காரணம் என்பதைக் கண்டறிவது கடினமான விடயமாகியுள்ளது.
உணவு மற்றும் தண்ணீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், உணவக ஊழியர்கள், பூச்சி மருந்து அடித்தவர்கள், ஹொட்டலின் அருகிலுள்ள பேக்கரி நடத்தும் ஒருவர் என மொத்தம் எட்டு பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சுற்றுலா சென்ற அந்த ஜேர்மன் குடும்பம் உயிரிழக்கக் காரணம் என்ன என்பதைக் கண்டறியும் முயற்சியில் துருக்கி நாட்டு அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |