அமைதி பேச்சுவார்த்தை...தீர்மானங்களின் நிலைகுறித்து துருக்கி வருத்தம்!
துருக்கியில் மேற்கொள்ளப்பட்ட அமைதி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஏற்றப்பட்ட தீர்மானங்கள் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லு (Mevlut Cavusoglu) தெரிவித்துள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போரானது 5 வாரங்களை தொட்டிருக்கும் நிலையில், போரை நிறுத்துவது குறித்த நான்காம் கட்ட அமைதி பேச்சுவார்த்தை ஐரோப்பிய நாடான துருக்கியில் நடைபெற்று முடிந்துள்ளது.
இதில் உக்ரைன் நடுநிலைமை நாடாக இருக்கவேண்டும் என்கிற ரஷ்யாவின் கோரிக்கை உக்ரைன் ஏற்றுக்கொண்டு அதை பரிசீலிக்க தயார் என தெரிவித்ததை தொடர்ந்து, உக்ரைனிய நகரங்களில் படை குறைப்பு மற்றும் படைகளின் பின்னகர்வு போன்ற நடவடிக்கையை ரஷ்ய ஏற்றுக்கொண்டது.
photo: REUTERS/Gonzalo Fuentes
இந்த அமைதி பேச்சுவார்த்தையில், போரை உடனடியாக நிறுத்துவது தொடர்பான உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் எழுத்துப்பூர்வமான கோரிக்கையும் ரஷ்ய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தநிலையில், இன்று A Haber ஒளிபரப்பு நிறுவனத்துக்கு துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லு அளித்த பேட்டியில், துருக்கியின் இஸ்தான்புல் நகரத்தில் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே எட்டப்பட்ட தீர்மானமான படைகளை திரும்ப பெறுதல் போன்ற முக்கிய முடிவுகள் முழுமையாக நடைமுறை படுத்தப்பட்டதாக தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கான தேவையான அனைத்து முன்னெடுப்புகளும் செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தொடர்ந்து இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களையும் அமைதி பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர துருக்கி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.