துருக்கி, சிரியா பேரழிவு! 15000த்தை தாண்டிய பலி எண்ணிக்கை
நிலநடுக்கத்தின் பேரழிவால் துருக்கி மற்றும் சிரியாவில் பலி எண்ணிக்கை 15,000-த்தை தாண்டிவிட்டதாக தெரிய வந்துள்ளது.
அதிகரிக்கும் பலி எண்ணிக்கை
மோசமான நிலநடுக்கம் காரணமாக துருக்கி, சிரியாவில் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஒருபுறம் மீட்புப்பணிகள் நடந்து வந்தாலும் இரு நாடுகளிலும் 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புப்பணிக்காக உதவிக் குழுக்கள் பல இரு நாடுகளுக்கும் விரைந்தன. ஆனாலும் அவர்கள் ஆயிரக்கணக்கான இடிந்த கட்டிடங்கள் மற்றும் உறைபனி வெப்பநிலையுடன் கடுமையான நிலைமைகளை எதிர்த்துப் போராடுகிறார்கள்.
50 ஆயிரம் பேர் படுகாயம்
இன்று காலை நிலவரப்படி நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 15,383 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 12,391 பேர் துருக்கியிலும், 2,992 பேர் சிரியாவிலும் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இதற்கிடையில் துருக்கி, சிரியாவுக்கு நிதி திரட்டுவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் நன்கொடையாளர் மாநாட்டை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.