இந்தியாவிற்கு சிக்கலை ஏற்படுத்தும் நகர்வு... வங்கதேசத்தில் ஆயுதங்களை தயாரிக்க துருக்கி முடிவு
வங்கதேசமும் துருக்கியும் தங்கள் இராணுவ ஒத்துழைப்பை அதிகரித்து வருவதுடன், இந்த வளர்ந்து வரும் நட்புறவு தற்போது பாதுகாப்புத் துறை வளர்ச்சியாகவும் விரிவடைந்து வருகிறது.
பாதுகாப்பு உறவு
முகமது யூனுஸின் தலைமையில், சட்டோகிராம் மற்றும் நாராயண்கஞ்ச் நகரங்களில் பாதுகாப்பு தொழில்துறை வளாகங்களை கட்டுவதற்காக வங்கதேசம் தற்போது துருக்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வங்காளதேச முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (BIDA) நிர்வாகத் தலைவர் சவுத்ரி ஆஷிக் மஹ்மூத் பின் ஹருன் துருக்கிக்கு ஐந்து நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டபோது இந்தப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
துருக்கியுடன் தீவிரமான பாதுகாப்பு உறவுகளை உருவாக்குவதே ஹருனின் வருகையின் முக்கிய நோக்கமாகும். இதில் இராணுவ உபகரணங்களின் கூட்டு உற்பத்தி, தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் வங்கதேசத்திற்கான திறன் மேம்பாடு ஆகியவை அடங்கும்.
வெளியான தகவலின் அடிப்படையில், ஹருனும் அவரது குழுவும் மத்திய அனடோலியாவின் கிரிக்கலே பகுதியில் அமைந்துள்ள துருக்கியின் அரசுக்குச் சொந்தமான பாதுகாப்பு நிறுவனமான MKE ஐ பார்வையிட்டுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, வங்காளதேச குழு MKE இன் பீரங்கி அமைப்புகள், எரிசக்தி ஆயுதங்கள் மற்றும் சிறிய ஆயுதங்கள் பற்றிய ரகசிய விளக்கங்களைப் பெற்றுள்ளனர்.
வங்கதேசமும் MKE நிறுவனமும் இணைந்து பணியாற்றுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு, வங்காளதேசம் 18 யூனிட் MKE போரான் 105 மிமீ ஹோவிட்சர்களை வாங்கியது. எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கையை 200 யூனிட்டுகளாக அதிகரிக்கவும் வங்கதேசம் திட்டமிட்டு வருகிறது.
இந்த நெருக்கமான உறவு
கூடுதலாக, துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஒட்டோகர் துல்பர் இலகுரக இராணுவ டாங்கிகளை வாங்குவது குறித்து வங்கதேசம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது. வங்கதேசம் துருக்கிய ஆயுத உற்பத்தியாளர்களிடமிருந்து பைரக்டார் TB2 ட்ரோன்கள் உட்பட 15 வகையான இராணுவ வன்பொருள்களை வாங்கியதிலிருந்து, கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், வங்கதேசமும் துருக்கியும் பாதுகாப்பு ஒத்துழைப்பில் வளர்ந்து வருகிறது.
MKE உடனான சமீபத்திய பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான தொழில்துறை ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் பதட்டங்கள் அதிகமாக இருக்கும் நேரத்தில், வங்கதேசத்திற்கும் துருக்கிக்கும் இடையிலான இந்த நெருக்கமான உறவு வெளிவருகிறது.
இந்தியாவுடனான சமீபத்திய இராணுவ மோதல்களின் போது துருக்கி பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்துள்ள நிலையில், இந்தியாவின் கிழக்கு அண்டை நாடான வங்கதேசத்தில் துருக்கியின் அதிகரித்து வரும் இருப்பு இந்தியாவில் கவலைகளை எழுப்பக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |