ஒரு மில்லியன் அகதிகளை வெளியேற்றும் துருக்கி
துருக்கியில் உள்ள ஒரு மில்லியன் சிரிய அகதிகளை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப உள்ளதாக துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
போர் காரணமாக சிரிய நாட்டைச் சேர்ந்த சுமார் 5 மில்லியன் மக்கள் அகதிகளாக துருக்கியில் தஞ்சமடைந்தனர். ஆனால் போர் முடிந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், சிரிய மக்கள் துருக்கியிலேயே தங்கி விட்டனர்.
இதனால் துருக்கியில் மக்களின் பாதுகாப்பு, பொருளாதாரம், கலாச்சாரம் போன்றவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதனைத் தொடர்ந்து சிரிய அகதிகளை திருப்பி அனுப்ப துருக்கி முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே இரு நாட்டு மக்களின் பாதுகாப்பு கருதி, துருக்கியில் உள்ள சிரிய அகதிகளை அவர்களது நாட்டுக்கே திருப்பி அனுப்ப திட்டமிடப்பட்ட நிலையில், 5 லட்சம் மக்கள் தங்கள் நாட்டிற்கு திரும்பினர். ஆனால் வடக்கு சிரியாவின் சில பகுதிகளில் இன்னும் மோதல்கள் உள்ளதாகவும், தற்போதைய சூழலில் சிரியர்கள் திருப்பி அனுப்பப்படுவது அவர்களுக்கு சாதகமானதாக இருக்காது என்றும் அகதிகள் விடயத்தில் நிபுணரான Metin Corabatir தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது ஒரு மில்லியன் சிரிய மக்களை திருப்பி அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக துருக்கி ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், சிரியாவில் உள்ள தற்போதைய பாதுகாப்பு நிலைமைகள் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் நல்ல முறையில் அமைத்துக் கொள்ள முடியாத சூழலில் உள்ளதால், சிரிய அகதிகளை திருப்பி அனுப்பும் முடிவு சிக்கலாகவே உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.